

கர்னாடக இசைப் பாடகர்களில் மதுரை சோமுவின் ‘ஃபுல் பென்ச்’ இசை நிகழ்ச்சிகளைக் காண 70-80களில் பெரும்திரளான ரசிகர்கள் கூடுவார்கள். மதுரை சோமுவின் கச்சேரியில்தான் கச்சேரி மேடையிலும் பக்கவாத்தியம் உப பக்கவாத்தியங்கள், கொன்னகோல் என்று பல வாத்தியங்களை வாசிப்பவர்கள் இருப்பார்கள். கச்சேரி மேடைக்கு எதிரிலும் எண்ணற்ற ரசிகர்கள் திரண்டிருப்பார்கள். அசாத்தியமான அவருடைய குரல்வளத்துக்கு நிறைய உதாரணங்களைச் சொல்வார்கள். அவருடைய ‘என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை.. இன்னும் என்ன சோதனையா முருகா’ பாடலை உள்ளம் உருகக் கேட்ட பாக்கியவான்களுக்குத்தான் மதுரை சோமுவின் இசையில் எப்படிக் கரைந்திருக்கிறார்கள் என்பது தெரியும்.
ஆனையாம்பட்டி ஆதிசேஷய்ய அய்யர் எழுதிய இந்தப் பாடலை அன்றைக்குக் கச்சேரி மேடைகளில் லால்குடி ஜெயராமன் (வயலின்), சி.எஸ்.முருகபூபதி (மிருதங்கம்) போன்ற இசை மேதைகளுடன் பாடியிருப்பார் மதுரை சோமு.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தப் பாடலை இந்தத் தலைமுறையைச் சேர்ந்த டி.கே.எஸ். மீனாட்சிசுந்தரம், டி.எஸ்.என். சேஷகோபாலன் ஆகியோர் மதுரை சோமுவின் நூற்றாண்டையொட்டி நடந்த விழாவில் வாசித்து, அந்த மகானுபாவருக்குப் பெருமை சேர்த்தனர். அவர்களின் நாகசுவரக் கடலின் ஆர்ப்பரிக்கும் அலைகளே தாளமாகி இந்தப் பாடலுக்கான காலப் பிரமாணத்தைத் தீர்மானிக்கும் அதிசயத்தை நீங்களும் பார்க்கலாம். கேட்கலாம். ரசிக்கலாம்.
என்ன கவி பாடினாலும் பாடலைக் காண: