Published : 03 Mar 2022 12:43 AM
Last Updated : 03 Mar 2022 12:43 AM

இரு மகான்களின் மகாசமாதிகள்!

ஏகத்வானந்தா

இந்தியாவின் தலைசிறந்த மகான்கள் இருவரது மகாசமாதியின் வருடாந்திர நினைவு தினம் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ஒருவர் சுவாமி ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி. காலத்தை வென்ற தனிச்சிறப்பு வாய்ந்த, ‘தி ஹோலி சயின்ஸ்' நூலை எழுதியவர். இவர், மார்ச் 9, 1936 அன்று ஒடிஷாவின் பூரியில் உயிர்நீத்தார்.

இன்னொருவர்,ஸ்ரீயுக்தேஸ்வர் கிரியின் உலகப் புகழ்பெற்ற சீடர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர். இவரும் மார்ச் 7, 1952இல் மகாசமாதி அடைந்தார். யோகானந்தர், முகுந்தா என்கிற இளைஞனாக ஸ்வாமி யுக்தேஸ்வரரின் பாதுகாப்பையும் அரவணைக்கும் வழிகாட்டுதலையும் பெறத் தொடங்கினார். வங்கத்தில் உள்ள செராம்பூர் ஆசிரமத்தில் ஸ்வாமி யுக்தேஸ்வர் அளித்த அன்பான பயிற்சியின் காரணமாக ஆர்வமுள்ள இளம் மாணவரின் ஆளுமை, அவரை ஒரு நிகரற்ற குருவாக மாற்றியது.

யோகானந்தரின் மேற்கத்திய பயணம் மற்றும் யோக தியானம் குறித்த அவரது முன்னோடி விரிவுரைகள், இறுதியாக உலகம் முழுவதும் ஆன்மிக மறுமலர்ச்சியின் அலைகளுக்கு / அதிர்வலைகளுக்கு வழிவகுத்தது.

யோகானந்தரின் போதனைகளின் மையமாக இருப்பது, தியான விஞ்ஞானத்தின் புராதன முறையான ‘கிரியா யோகம்’ ஆகும். உலகம் முழுவதும் எஸ்.ஆர்.எஃப்/ஒய்.எஸ்.எஸ்-இன் ஆயிரக்கணக்கான கிரியா யோக தீட்சை பெற்றவர்கள், பிறப்பு மற்றும் இறப்பு எனும் தவிர்க்க முடியாத சுழற்சிகளிலிருந்து விடுதலையை அடைய இந்தப் பழங்கால உத்தியை தவறாமல் பயிற்சி செய்கின்றனர்.

இந்த பிராணாயாம உத்தியானது உயிர் சக்தியின் கட்டுப்பாட்டையும், ஐம்புலன்களை நோக்கி வெளிப்புறமாக இல்லாமல், முதுகுத்தண்டு மற்றும் மூளையை நோக்கி, ஆற்றலை உள்நோக்கிச் செலுத்தும் செயல்முறையையும் உள்ளடக்கியது. பக்தி, சரியான செயல்பாடு, உண்மையான குருவின் வழிகாட்டுதல் ஆகியவற்றுடன் இணைந்தால், ‘கிரியா யோக உத்தி’ தோல்வியடையாது என்று யோகானந்தர் கூறினார் . எஸ்.ஆர்.எஃப் / ஒய்.எஸ்.எஸ் பாடங்களை உலகெங்கிலும் உள்ள உண்மையைத் தேடுபவர்கள் பயன்படுத்த இயலும். இவை ‘கிரியா யோக’த்தை எப்படிப் பயிற்சி செய்வது மற்றும் தியானத்தின் ஆரம்ப உத்திகளையும் உத்திகளையும், 'எப்படி வாழ வேண்டும்' என்கிற கொள்கைகளையும் பற்றிய விவரங்களைத் தருகிறது.

அமெரிக்காவிற்கான அப்போதைய இந்தியத் தூதர் டாக்டர் பினய் ரஞ்சன் சென்னைக் கவுரவிக்கும் நிகழ்ச்சி அது. யோகானந்தர் பார்வையாளர்கள் முன் வலிமையான, துடிப்பான, முழக்கமிடும் குரலில் சொற்பொழிவாற்றினார். “எங்கே கங்கையும் கானகங்களும் இமாலயக் குகைகளும் மனிதர் களும் இறைவனைக் கனவு காண் கின்றனரோ… அந்தப் பூமியைத் தொட்டது என் தேகம்; நான் புனித னானேன்!”. ‘என் இந்தியா’ என்னும் தலைப்பில் இப்படி எழுச்சியூட்டும் கவிதையைச் சொன்னவுடன் யோகானந்தர் தரையில் சரிந்தார்.

‘ஃபாரஸ்ட் லான் மெமோரியல்-பார்க்’கின் சவக்கிடங்கு இயக்குநரான ஹாரி டி. ரோவ், எதிர்கால சந்ததி யினருக்காகப் பின்வரும் வரிகளைப் பதிவு செய்திருக்கிறார்: “பரமஹம்ஸ யோகானந்தரின் உடல் வியப்புக்குரிய ஒரு மாறாத நிலையில் இருந்தது. அம் மகாகுரு, யோகம் மற்றும் தியானத்தின் மூலம் இயற்கை மற்றும் காலத்தின் சக்திகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைத் தனது வாழ்க்கையில் நிரூபித்ததைப் போலவே, மரணத்திலும் மனிதகுலத்திற்கு நிரூபித்தார்”.

யோகானந்தரின் உலகப் புகழ்பெற்ற ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ வெளிவந்து 75 வது ஆண்டாக இந்த ஆண்டு நினைவுகூரப்படுகிறது. இந்த எழுச்சியூட்டும் புத்தகத்தின் கடைசி வரிகளாக யோகானந்தர் எழுதியது போல் “இறைவா, நீ இந்த சந்நியாசிக்குப் பெரிய குடும்பத்தை அளித்திருக்கிறாய்!” உண்மையில், யோகானந்தரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை பல தசாப்தங்களாக அதிவேகமாக வளர்ந்துள்ளது. அவருடைய புனித போதனைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் உண்மையிலேயே உயர்ந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

யோகானந்தரின் வாழ்க்கையில் ஆன்மிக அடித்தளத்தை மெருகேற்றிய சுவாமி யுக்தேஸ்வர் கிரி, ‘பிரேமாவதாரம்’ என்று அறியப்பட்ட அவரது அன்புக்குரிய மற்றும் முதன்மையான சீடர் விட்டுச் சென்ற ஆன்மிகப் பாரம்பரியத்தைப் பற்றி உண்மையிலேயே பெருமைப் பட்டிருப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x