சித்திரப் பேச்சு: அதிசய துவாரபாலகர்

சித்திரப் பேச்சு: அதிசய துவாரபாலகர்
Updated on
1 min read

தஞ்சையைச் சுற்றியுள்ள சப்தஸ்தான தலங்களில் ஒன்றான திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் சன்னிதியின் தெற்குப் பக்கத்தில் இந்த அதிசய துவார பாலகர் அருள்கின்றார்.

வித்தியாசமாக இரண்டு கரங்களுடன், வலதுகாலை நன்கு ஊன்றியபடி இடதுகாலை சற்று வளைத்து பெருவிரலை மட்டும் பூமியில் ஊன்றியபடி ஓய்யாரமாக நின்ற கோலத்தில், மிகவும் சாந்த வடிவாகக் காட்சி தருகிறார். வலது கரத்தை மேலே உயர்த்திச் சுட்டு விரலால், இறைவன் உள்ளே இருக்கிறான் என்பதை உணர்த்துவதுபோல் காண்பிக்கிறார். இடது கரத்தை வித்தியாசமான கதாயுதத்தின் மீது ஒயிலாக வைத்தபடி உள்ளார். இவரது தலையில் சூட்டியுள்ள மகுடமும் அதன் மீது மணிகளால் ஆன வட்டமும் வித்தியாசமாக உள்ளன. சுருண்ட தலைக் கேசமும், காதுகளில் குண்டலமும் வலதுகாது அருகே நாகமும் காணப்படுகின்றது. கழுத்திலும், இடையிலும் புதுமையான அணிமணிகளும், ஆடைகளும், மார்பில் மலர்களால் ஆன முப்புரிநூலும் அணிந்துள்ளார். இவரது புஜபலம், சிம்மத்தைப் போன்றது என்பதை குறிப்பிட இரு புஜங்களிலும் வாய் பிளந்த சிம்மத்தை வடித்துள்ளார் சிற்பி. கதாயுதமும் புதுமையாக உள்ளது. பல்லவர்கள் காலத்தை நினைவுபடுத்தினாலும், இடையிலும் புஜத்திலும் காணப்படும் சிம்மங்கள் இந்த துவாரபாலகரை, சோழர் காலத்தவர் என்று பறைசாற்றுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in