Last Updated : 07 Oct, 2021 03:12 AM

 

Published : 07 Oct 2021 03:12 AM
Last Updated : 07 Oct 2021 03:12 AM

சித்திரப் பேச்சு: எம சண்டேசர்

இவருக்கு எம சண்டேசர் என்று பெயர். இவர் இருப்பது திருவாரூரில். திருவாரூர் தேர் அழகு, திருவிடைமருதூர் தெரு அழகு என்பது போல, திருவாரூரில் பிறக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி என்று ஒரு சொலவடை உண்டு. அதனால், எமதர்மன் திருவாரூரில் தனக்கு வேலை இல்லையே என்று கவலையுடன் தியாகராஜரை வேண்டினார். நீ வருந்த வேண்டாம்! நம்மை வணங்கும் பயனை வழங்கும் சண்டேசர் பதவியை இங்கு உமக்கு யாம் தந்தோம் என்று அருளிய தலம் இது. ஆதி சண்டேசர் வலது கரத்தில் மழுவுடன், இடது கரத்தை தொடையில் ஊன்றியபடி, இடது காலை மடித்து வைத்து, வலது காலைத் தொங்க விட்டபடி, அமர்ந்த நிலையில் இறைவனின் அபிஷேக நீர் வரும் கோமுகம் அருகே சிறிய சந்நிதியில் அருள்பாலிக்கிறார். இவர் சந்நிதியில் கை தட்டி வணங்குவார்கள். அப்படி கை தட்டி வணங்கக் கூடாது. இரண்டு கைகளையும் விரித்துக் கட்டி, பின் கைகளைத் துடைத்தபடி, “இக்கோவிலில் இருந்து நான் எதையும் எடுத்துச் செல்லவில்லை, குறிப்பாக விபூதியைக்கூட எடுத்துச் செல்லவில்லை” என்பதைத் தெரிவிக்கவே அப்படிச் செய்கிறார்கள். இந்த எம சண்டேசர் வித்தியாசமான மிகப் பெரிய ஜடாமுடியுடன் வேறு எங்கும் இல்லாத வடிவில் காட்சி தருகிறார். வலது காலை ஊன்றியபடி, இடது காலை மடித்து வைத்தபடி அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். வலது கரம் ஜபம் செய்ய அட்ச மாலையை பிடித்திருக்கும் பாவனையில் விரல்கள் காணப்படுகின்றன. இடது கரத்தில், எமதர்மன் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் மிகப்பெரிய தண்டத்தை வைத்திருக்கிறார். மிகச் சாதாரணமான அணிமணிகளையும், முப்புரிநூலையும் அணிந்துள்ளார். பல்லவர் காலத்தைச் சேர்ந்த சிற்பம் போல் தெரிகிறது. கையில் உள்ள தண்டம் பல்லவர்கள் காலத்தை ஒத்து உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x