

ராமாயணத்தில் சீதையை ராவணன் தூக்கிச் செல்லும்போது, ஜடாயு தன் பலவீனத்தையும் ராவணனின் பலத்தையும் உணராமல் சீதையை மீட்பதற்காகப் போராடினார். தன் ஜடாமுடியின் எண்ணிக்கை அளவுக்கு அத்தனை வருடங்கள் வாழ்நாளைப் பெற்றவா். தசரதருக்கு உற்ற நண்பன் ஜடாயு.
ராவணன் பிடியில் அபயக் குரல் எழுப்பிக் கதறியபடி போன சீதையைக் காப்பதற்காக ஜடாயு, அரக்கனான ராவணனை எச்சரித்தார். அழிவை நோக்கிச் செல்லாதே, நீ அழியும் காலம் தொடங்கிவி்ட்டது என்று எடுத்துக்கூறித் தடுக்கிறார். புஷ்பக விமானத்தில் ராவணனின் கோரப்பிடியில் தவித்த சீதையை மீட்பதற்காக, தன் வலிமை முழுவதையும் செலவழித்து அவனுடன் போரிட்டார். இந்தப் போராட்டத்தில் ஜடாயுவின் இறகு களை வெட்டி வீசினான் ராவணன்.
இயற்கையே ராவணனின் இந்தச் செயலை ராமனுக்குக் கூறுங்கள் என்று துடித்துப் பூமியில் விழுகிறார் ஜடாயு. ராமன் லட்சுமணருடன் சீதையைத் தேடிவந்தபோது உயிர்பிரியும் வேளையில் இருந்த ஜடாயுவைக் கண்டு விவரம் கேட்டறிந்தனர். பறவைகளின் தலைவனான ஜடாயுவுக்கு, ஒரு மகனாக நின்று ஈமக்கிரியை செய்தார். பறவைக்கும் பாரபட்சம் பார்க்காத கருணைக் கடல் ராமன்.
ராமன் வனவாசத்துக்குச் சென்றதால் பிரிவுத்துயரால் தவித்து உயிர்விட்டு தசரதர் சொர்க்கத்துக்குப் போனார். ஆனால், ஜடாயுவோ ராமன் செய்த இறுதிக்கடன்களால் மோட்ச கதியை அடைந்தார். பறவை இனமான ஜடாயுவுக்கு அந்தச் சிறப்பு கிடைத்தது. ராமனின் கதையில் விலங்கு, பறவை, ராட்சசர், அரக்கர், தேவர், ரிஷிகள் என எல்லோரும் சிறப்பைப் பெறுகிறார்கள்.
ஜடாயுவைப் போலே, மகாலட்சுமியான சீதையைக் காக்க, நான் எந்த உதவியும் செய்யவில்லை என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com