Published : 30 Jul 2020 09:26 AM
Last Updated : 30 Jul 2020 09:26 AM

ஜென் துளிகள்: நீங்கள் பிணைக்கப்பட்டுள்ளீர்கள்!

யேல் பல்கலைக்கழகத்தில் ஒரு மாலைப்பொழுதில் ‘தர்ம’ உரையை முடித்த சியுங் சானிடம் ஒரு மாணவர், “தெளிவான மனமென்றால் என்ன?” என்று கேட்டார்.

சியுங் சான், தன் கையிலிருந்த கடிகாரத்தைக் காட்டி, “என்ன இது?” என்று கேட்டார்.

“இது கைக்கடிகாரம்”, என்று பதிலளித்தார் அந்த மாணவர்.

“நீ பெயர், வடிவம் போன்ற வற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளாய். இது கைக்கடிகாரமல்ல.”

“என்ன இது?”

“உனக்கு இது ஏற்கெனவே புரிந்து விட்டது.”

ஒரு கணம் அமைதியாக இருந்த மாணவர், மீண்டும் “என்ன இது?” என்று கேட்டார்.

“உனக்கு இது ஏற்கெனவே புரிந்துவிட்டது! உன்னால் இதைப் பார்க்க முடியும், என்னால் இதைப் பார்க்க முடியும்,” என்றார் சியுங் சான். (பார்வையாளர்கள் சிரித்தார்கள்).

“நன்றி,” என்றார் அந்த மாணவர்.

“அவ்வளவுதானா? உனக்கு என்ன புரிந்தது?” என்று கேட்டார் சியுங் சான்.

“எனக்குத் தெரியவில்லை,” என்றார் மாணவர்.

சியுங் சான் அங்கிருந்த கோப்பை யைக் காட்டி, “வஜ்ர சூத்திரம், ‘இந்த உலகில் தோன்றும் எல்லாப் பொருட்களும் நிலையற்றவை. நீங்கள் எல்லாத் தோற்றங்களையும் தோற்றமற்றவையாகப் பார்க்கும்போது, உங்களால் எல்லாவற்றின் உண்மையான இயல்பைப் பார்க்க முடியும்’ என்று சொல்கிறது. அதனால், இந்தக் கோப்பையின் வடிவத்தில் நீ பிணைக்கப்பட்டிருந்தால், உன்னால் உண்மையைப் புரிந்துகொள்ள முடியாது. நீ இதை ஒரு கோப்பை என்று சொல்லும்போது, அதன் பெயர் அல்லது வடிவத்துடன் பிணைக்கப்பட்டுள்ளாய். ஆனால், இது ஒரு கோப்பை அல்ல என்று நீ சொன்னால், நீ வெறுமையுடன் பிணைக்கப்பட்டுள்ளாய். இது கோப்பையா, இல்லையா?” என்று கேட்டார் சியுங் சான்.

அந்த மாணவர் அமைதியாக இருந்தார். பிறகு, “நான் மாட்டிக் கொண்டிருக்கிறேன்” என்றார் அந்த மாணவர்.

“சரி, உனக்காக நான் பதிலளிக்கி றேன்,” என்றார் அவர். அவர் அந்தக் கோப்பையை எடுத்து அதிலிருந்த நீரைப் பருகினார். “இது மட்டும்தான்”, என்றார். பிறகு, சில கணங்களுக்குப் பிறகு, “எல்லாப் பொருட்களுக்கும் பெயர்களும், வடிவங்களும் இருக்கின்றன. ஆனால், இந்தப் பெயர்களை, வடிவங்களை யார் உருவாக்கினார்கள்?

சூரியன், ‘என் பெயர் சூரியன்’ என்று சொல்வதில்லை. ‘இது சூரியன், இது நிலா, இது மலை, இது ஆறு’ என்று மக்கள் சொல்கிறார்கள். அப்படியிருக்கும்போது யார் வடிவங்களை, பெயர்களை உருவாக்கினார்கள்? அவை சிந்தனை யால் உருவாக்கப்பட்டுள்ளன” என்றார் அவர்.

“யார் சிந்தனையை உருவாக்கி யது?” என்றார் மாணவர்.

சியுங் சான் சிரித்தார். “நீதான் சிந்தனையை உருவாக்கினாய்!” என்றார். “ஜென் மனம் என்பது இயல்பான மனத்துக்குத் திரும்பு வதாகும். இயல்பான மனம் என்பது சிந்தனைக்கு முன் இருப்பதாகும். சிந்தனைக்குப் பிறகு, எதிர்நிலைகள் வந்துவிடுகின்றன. சிந்தனைக்கு முன் எதிர்நிலைகள் இருப்பதில்லை. இதுதான் முழுமை. சொற்கள், பேச்சு எதுவுமில்லை. நீ வாயைத் திறந்தால், தவறாகிவிடுகிறது. அதனால், சிந்தனைக்கு முன் இருக்கும் மனமே தெளிவான மனம். தெளிவான மனத்தில், அகமும் புறமும் இல்லை.

அந்தச் சுவர் என்ன நிறத்தில் உள்ளது? வெள்ளை. இது மனம். வெறும் வெள்ளை. என் மனமும் இந்த வெள்ளையும் ஒன்றாகிறது. இது என்ன? இது ஒரு கைக்கடிகாரம். உன் பதில் சரியானது. ஆனால், ‘நீ பெயர், வடிவத்துடன் பிணைக்கப்பட்டுள்ளாய்’ என்று சொன்னவுடன் நீ உடனே சிந்திக்கத் தொடங்கிவிட்டாய்: ‘ஓ, என் பதிலில் என்ன தவறு? பெயர், வடிவத்துடன் பிணைக்கப்படாமலிருக்க வேண்டுமென்றால் என்ன பதிலை என்னால் அளிக்க முடியும்?’ என்ற இந்த மாதிரியான சிந்தனை. நான் சொன்னதில் நீ பிணைக்கப்பட்டிருந்தாய்.

ஆனால், நான் உன் மனத்தைச் சோதிக்கவே அதைச் சொன்னேன். என் சொற்களில் நீ பிணைக்கப்படாமல் இருந்திருந்தால், ‘நீங்கள் என் சொற்களில் பிணைக்கப்பட்டுள்ளீர்கள்’ என்று உன்னால் சொல்லியிருக்க முடியும். இது ஒரு நல்ல பதில். நான் உன்னிடம், “நீ பெயர், வடிவத்துடன் பிணைக்கப்பட்டுள்ளாய்’ என்று சொல்கிறேன். அதற்குப் பிறகு, ‘நீங்கள் என் சொற்களால் பிணைக்கப்பட்டுள்ளீர்கள்’ என்று நீ சொல்கிறாய்”’. (சிரிப்பலை எழுகிறது)

“நீ என்னிடம் ‘இது என்ன’ என்று கேட்கும்போது, ‘உனக்கு ஏற்கெனவே அது புரிந்துவிட்டது’ என்று நான் பதிலளித்தேன்”. சியுங் சான் சிரித்தபடி தொடர்ந்தார், ‘இது சிந்தனைக்கு முன். அதனால், நீ சிந்திப்பதை நிறுத்தும்போது, பிரபஞ்சமும் நீயும் ஒன்றாகிவிடுகிறீர்கள். உன் சாரமும், இந்த முழுப் பிரபஞ்சத்தின் சாரமும் ஒன்றுதான். அதனால், இந்தக் கோப்பை நீதான், நீதான் இந்தக் கோப்பை. அவை இரண்டல்ல. நீ சிந்திக்கும்போது, அவை வேறு வேறாக இருக்கின்றன”, என்றார்.

“நான் இப்போது அனைத்தையும் விளக்கிவிட்டேன். அதனால் உன்னிடம் கேட்கிறேன்: இந்தக் கோப்பையும், நீயும் ஒன்றா, அல்லது வேறு வேறா?”

“உங்களுக்கு ஏற்கெனவே தெரியும்” என்றார் மாணவர்.

“எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் உன்னிடம் கேட்கிறேன்” என்றார் அவர்.

“உங்களுக்கு ஏற்கெனவே புரிந்து விட்டது.”

“அதனால் உன்னிடம் கேட்கிறேன்!”

“இதில் தெளிவான நீர் உள்ளது.”

“நீ தெளிவான நீருடன் பிணைக்கப்பட்டுள்ளாய்.”

“நீங்கள் தெளிவான நீருடன் பிணைக்கப் பட்டுள்ளீர் கள்!” (மீண்டும் சிரிப்பலை)

சியுங் சான், சிரித்தபடி, “மிகச் சிறப்பு! இப்போது உனக்குப் புரிந்துவிட்டது. கோப்பை, நீரால் நிறைந்துள்ளது. சுவர் வெள்ளையாக உள்ளது. ஜென் மனம் என்பது அன்றாட மனம். அவ்வளவுதான்,” என்றார்.

(டிராப்பிங் ஆஷஸ் ஆன் தி புத்தா: தி டீச்சிங் ஆஃப் ஜென் மாஸ்டர் சியுங் சான் புத்தகத்திலிருந்து)

தமிழில்: என். கௌரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x