Published : 23 Jul 2020 09:38 AM
Last Updated : 23 Jul 2020 09:38 AM

ஜென் துளிகள்: வசந்தகாலம் என்பது உங்கள் மனம்

சியுங் சான்

மலைகளின் ஆழத்துக்குள், ஒரு மாபெரும் கோயில் மணி ஒலிக்கப்படுகிறது. காலைக் காற்றில், அது அதிர்ந்துகொண்டிருப்பதை நீங்கள் கேட்கிறீர்கள். உங்கள் மனத்தில் உள்ள எண்ணங்கள் எல்லாம் மறைந்து போகின்றன. அங்கு நீங்களாக இருக்கும் எதுவும் இல்லை; நீங்கள் அல்லாத எதுவும் இல்லை. முழுப் பிரபஞ்சத்தை நிறைக்கும் மணியின் ஓசை மட்டுமே இருக்கிறது.

வசந்த காலம் வருகிறது. நீங்கள் பூக்கள் மலர்வதையும், பட்டாம்பூச்சிகள் பறப்பதையும் பார்க்கிறீர்கள். பறவைகள் பாடுவதைக் கேட்கிறீர்கள். இதமான பருவத்தைச் சுவாசிக்கிறீர்கள். இந்த வசந்தகாலம் என்பது உங்கள் மனம் மட்டும்தான். இது ஒன்றுமே இல்லை.

நீங்கள் நயாகரா அருவிக்குச் செல்கிறீர்கள். அங்கே படகை எடுத்துக்கொண்டு அருவிக்குக் கீழே செல்கிறீர்கள். அருவியிலிருந்து விழும் நீரானது உங்கள் முன்னால் இருக்கிறது. உங்களைச் சுற்றி இருக்கிறது. உங்களுக் குள்ளும் இருக்கிறது. உடனடியாக, நீங்கள் ஆஆஆஆ! என்று கத்துகிறீர்கள்.

இந்த அனுபவங்களில் எல்லாம், புறமும் அகமும் ஒன்றாகின்றன. இதுதான் ஜென் மனம். உண்மையான இயல்பில் எதிர்நிலைகள் இல்லை. பேச்சும் சொற்களும் தேவையில்லை. யோசிக்காம லேயே, எல்லா விஷயங்க ளுக்கும் எப்படி இருக்கின்றனவோ, அப்படியே சரியாக இருக்கின்றன. உண்மையும் இது போன்றதுதான். பிறகு, ஏன் நாம் சொற்களைப் பயன்படுத்துகிறோம்? ஏன் புத்தகத்தை உருவாக்குகிறோம்?

கீழைத்தேய பாரம்பரிய மருத்துவத்தில், உங்களுக்கு வெப்பம் தொடர்பான நோய் இருந்தால், நீங்கள் வெப்பமான மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். சொற்கள், பேச்சு ஆகிய இரண்டிலும் பெரும்பாலானவர்கள் மிகுந்த பற்றுடன் இருப்பார்கள். அதனால், இந்த நோயைச் சொல்-பேச்சு மருத்துவத்தின் மூலமே குணப்படுத்த வேண்டியிருக்கும்.

பெரும்பாலானவர்களுக்கு இந்த உலகத்தைப் பற்றிய மயக்கமான தோற்றமே இருக்கும். அவர்கள் அது எப்படி இருக்கிறதோ, அப்படி அதைப் பார்க்க மாட்டார்கள். அவர்கள் உண்மையைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். நல்லது என்ன, கெட்டது என்ன? யார் நல்லதை உருவாக்குகிறார்கள், யார் கெட்டதை உருவாக்குகிறார்கள்? அவர்கள் தங்கள் கருத்துகளுடன் தங்களது முழுமையான வலிமையோடு ஒட்டிக்கொள்கிறார்கள். ஆனால், ஒவ்வொருவரின் கருத்தும் வித்தியாசமானது. உங்கள் கருத்துச் சரியானது, வேறொருவரின் கருத்துத் தவறானது என்று உங்களால் எப்படிச் சொல்ல முடியும்? இதுதான் மாயை.

உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், உங்கள் சூழ்நிலை, உங்கள் நிலை, உங்கள் எல்லாக் கருத்துகளையும் விட வேண்டும். பிறகு, உங்கள் மனமானது யோசித்தலுக்கு முன் இருப்பதாக மாறும். “யோசித்தலுக்கு முன்” என்பது தெளிவான மனம். தெளிவான மனத்துக்கு அகமும் புறமும் கிடையாது. இப்படி இதுவாக இருத்தல் கொள்கிறது. “இப்படி இது இருக்கிறது” என்பதே உண்மை.

“நீங்கள் இந்த வாயிலைக் கடந்து செல்ல வேண்டுமென்றால், சிந்திக்க இடம்கொடுக்காதீர்கள்” என்று ஒரு புகழ்பெற்ற ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், ஜென்னைப் புரிந்துகொள்ள முடியாது என்று இதற்கு அர்த்தம். யோசித்தலுக்கு முன் இருக்கும் மனத்தைத் தக்கவைத்துக் கொண்டால், அதுதான் ஜென் மனம்.

மற்றொரு ஜென் குரு, “புத்தர் கற்பித்த எல்லாமே உங்கள் சிந்தனையைச் சரிசெய்யத்தான். ஏற்கெனவே சிந்தனையை நிறுத்திவிட்டால், புத்தரின் சொற்களுக்குத் தேவையே இல்லை.” என்று சொல்கிறார்.

“வடிவம் என்பது வெறுமை, வெறுமை என்பது வடிவம்” என்று இருதய சூத்திரம் சொல்கிறது. “வடிவம் இல்லாவிட்டால், வெறுமை இல்லை” என்று இதற்கு அர்த்தம்”. ஆனால், “வடிவம் இல்லாவிட்டால், வெறுமை இல்லை” என்பதன் உண்மையான அர்த்தம், “வடிவம் வடிவம் தான், வெறுமை வெறுமை தான்”.

நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், உங்களால் இந்தச் சொற்களைப் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் யோசிக்காமல் ‘அதன் இயல்பில்’ இருந்தால், அதுதான் புத்தரின் இயல்பு.

‘புத்தரின் இயல்பு என்ன?’

மலைகளின் ஆழத்துக்குள், ஒரு மாபெரும் கோயில் மணி ஒலிக்கப்படுகிறது.

உண்மையும் வெறுமனே இது போலதான்.

தமிழில்: என். கௌரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x