

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
29.10.2019 முதல் 13.11.2020 வரை
நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள் கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்ல பட்சத்து பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், பவம் நாமகரணம், நேந்திரம், ஜுவனம் மறைந்த மந்தயோகத்தில் சந்திரன் ஓரையில் பஞ்சபட்சியில் காகம் துயில் பயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்ணிய காலத்தில் வர்ஷருதுவில், அதிகாலை 3 மணி 40 நிமிடத்திற்கு சூரிய உதயம் நாழிகை 54.09க்கு கன்னி லக்னத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னத்தில் தங்கத்துக்கும், தலைமைக்கும் உரிய கிரகமான வியாழன் எனும் குருபகவான் ஸ்திர வீடான விருச்சிகத்திலிருந்து தன் சொந்த வீடான தனுசில் சென்று அமர்கிறார். 28.3.2020 முதல் 01.06.2020 வரை அதிசாரமாகவும், 2.6.2020 முதல் 6.7.2020 வரை வக்கிரமாகவும் நீசவீடான மகர ராசியில் சஞ்சரிக்கிறார்.
குருபகவானின் இந்தப் பெயர்ச்சியில் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். பாகிஸ்தான்- சீன எல்லைகள் பலப்படுத்தப்படும். கல்வித்துறை நவீனமாகும். ஆள்மாறாட்டம் செய்யமுடியாதபடி நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வுகளுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.
போர்தளவீடான தனுசில் குரு அமர்வதால் இந்தியா அதி நவீன ஆயுதங்களைத் தயாரிக்கும். சாமியார்கள், ஆன்மிகவாதிகள் பாதிப்படைவார்கள். தேசத்தைப் பாதித்த நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவிற்கு வரும். அமைச்சர்கள், சாமியார்கள் வழக்குகளில் சிக்குவார்கள். ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் போராடுவார்கள். அரசு ஊழியர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும்.
ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் தங்கம் விலை குறையும். உலகமெங்கும் பொருளாதார மந்தநிலை (Recession) அதிகரிக்கும். 2020-ல் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் அடி வாங்கும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். இன்சூரன்ஸ் துறை அதிக லாபம் ஈட்டும். கச்சா எண்ணெய் விலை அதிகமாகும்.
சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை உயரும். இந்தியாவில் கோவா, குஜராத், பம்பாய் பகுதிகளில் வியாபாரம் பாதிக்கும். வடக்கு, கிழக்கு ராஜஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் நில நடுக்கம் வரும். ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதி, அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம் பகுதிகளில் கலவரம் வெடிக்கும். வடகொரியா, மங்கோலியா, கனடா, பாகிஸ்தானில் கலவரம் பரவும். தமிழ்நாட்டில் சத்தியமங்கலம், ஈரோடு, கடலூர் உளுந்தூர் பேட்டை பகுதிகள் பாதிக்கும்.
கன்னி ராசி வாசகர்களே
புத்திசாலித்தனமும், சகஜமாக எல்லோரிடமும் பேசிப் பழகும் குணமும் கொண்டவர்களே! இதுவரை உங்களின் முயற்சி வீடான மூன்றாம் வீட்டில் அமர்ந்துகொண்டு, எந்த ஒரு வேலையையும் செய்யவிடாமல் முடக்கி வைத்த குரு பகவான் இப்போது 29.10.2019 முதல் 13.11.2020 வரை நான்காவது வீட்டில் அமர்கிறார். செலவுகளைச் சுருக்கப் பாருங்கள். சேமிப்புகள் கரையும். உங்களைப் பற்றியோ, உங்கள் குடும்பத்தாரைப் பற்றியோ உறவினர்கள், நண்பர்கள் விமர்சித்துப் பேசுவதைக் கேட்டு மனைவி மக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். குருபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வராத பணமெல்லாம் கைக்கு வந்து சேரும். தங்க ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள் வாங்குவீர்கள்.
வெளிநாட்டி லிருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வெளியூர்ப் பயணங் கள் சாதகமாக இருக்கும். மகளுக்குத் திருமணம் ஏற்பாடாகும். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வேலையில்லாதவருக்கு வேலை கிடைக்கும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஊர் பொது விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். குலதெய்வஎஃ கோயிலுக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். கோயிலைப் புதுப்பிக்கும் ஆலோசனை செய்வீர்கள்.
அடகு வைத்திருந்த தங்க நகைகளை மீட்பீர்கள். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். 29.10.2019 முதல் 31.12.2019 வரை குருபகவான் மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதிலும் நாட்டமின்மை, வீண் சந்தேகம், இழப்புகள், ஏமாற்றங்கள், திடீர் பயணங்கள், மருத்துவச் செலவுகள் வந்து போகும். மகான்கள், சித்தர்களின் அறிமுகம் கிடைக்கும். 1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். தடைபட்ட கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிகழும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குருபகவான் உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் அறிவுப்பூர்வமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். 28.03.2020 முதல் 6.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்திலும் அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடுகட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.
திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும். பிள்ளைகளின் பிடிவாதக் குணம் தளரும். 07.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசுக் காரியங்கள் தடைப்பட்டு முடியும். பயணங்களால் உற்சாகமடைவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்.
31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. இந்த குரு மாற்றம் உங்களை பொறுமை, நிதானத்தால் புகழ்பட வைப்பதுடன், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றியையும் பெற வைக்கும்.
பரிகாரம்
வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகடல்மகள் நாச்சியார் சமேத ஸ்ரீரங்கநாதரை புதன்கிழமைகளில் சென்று வணங்குங்கள். துவரம் பருப்பைத் தானம் கொடுங்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.