Published : 17 Oct 2019 12:08 PM
Last Updated : 17 Oct 2019 12:08 PM

உட்பொருள் அறிவோம் 33: காலம் பொய்யாகப் போகும்

சிந்துகுமாரன்

ஒருமுறை நாரதர் வைகுண்டம் செல்லும் வழியில் ஒரு காட்டின் வழியாகச் செல்கிறார். பலபேர் அமர்ந்து தவம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர் வைகுண்டம் செல்லும் தகவல் அறிந்ததும் பலரும் பல வரங்களைக் கேட்கிறார்கள். நாரதர் புன்னகையுடன் அவற்றை எல்லாம் நாராயணனிடம் சொல்வதாக வாக்களிக்கிறார். கடைசியில் இரண்டு பேர் நிற்கிறார்கள்.

ஒருவர் ஓடிவந்து, ‘நாரதரே, திருமாலின் தரிசனம் கிடைக்க நான் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? இதை அவனிடமே கேட்டு வாருங்கள்,’ என்கிறார். நாரதரும் சரி என்கிறார். மற்றவர் மௌனமாகக் காத்திருக்கிறார். நாரதர் அவரிடம் வரும்போது, அவர் காலில் விழுந்து பணிகிறார். ‘உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்கிறார் நாரதர். ‘ஐயா, பரமாத்மனின் அருள் கிடைக்க இன்னும் எவ்வளவு காலம் நான் காத்திருக்கவேண்டும் என்று அறிந்து வர முடியுமா?’ என்று இறைஞ்சுகிறார். நாரதரும் புன்னகை யுடன், ‘நிச்சயம் கேட்டு வருகிறேன்,’ என்று சொல்லி மேலே செல்கிறார்.

கொஞ்ச காலம் கழித்து நாரதர் திரும்ப வரும்போது கடைசி இரண்டு பேரைத் தவிர மற்ற எல்லோரும் ஓடிப் போய் அவரிடம், ‘என்ன சொன்னார் நாராயணன்?’ என்று கேட்கிறார்கள். அவரவர்களுக்குத் தகுந்த பதிலைக் கூறுகிறார் நாரதர். கடைசி இருவரில் ஓடிவந்து கேட்ட முதலாமவர், ‘என்ன சொன்னார் பெருமாள்?’ என்று கவலையுடன் கேட்கிறார். ‘உனக்கு இன்னும் நான்கு பிறவிகள் இருப்பதாகச் சொன்னார்,’ என்கிறார் நாரதர். கேட்டவரின் முகம் வாடிப்போகிறது. ‘இன்னும் நான்கு பிறவிகளா? இன்னும் நான்கு முறை ஒரு தாயின் வயிற்றில் பிறந்து, கஷ்டப்பட வேண்டுமா நான்?’ என்று புலம்புகிறார் அவர்.

மற்றவர் பொறுமையாக நின்றுகொண்டிருக்கிறார். நாரதர் அவரருகில் போகிறார். ‘நீ எந்த மரத்தடியில் அமர்ந்து தவம் செய்துகொண்டிருக்கிறாயோ, அந்த மரத்தில் உள்ள இலைகளின் எண்ணிக்கை அளவுக்குப் பிறவிகள் இன்னும் உனக்கு இருப்பதாகச் சொன்னார் மாதவன்,’ என்றார் நாரதர். அந்த மனிதனின் முகம் மலர்ந்தது. ‘அவ்வளவுதானா? இந்த ஒரே ஒரு மரத்தில் உள்ள இலைகளின் எண்ணிக்கை அளவுதானா நான் பிறவியெடுக்க வேண்டும்? எவ்வளவு கருணை அவனுக்கு?’ என்று கண்களில் நீர்மல்கக் கூறுகிறார் அவர்.

கருத்துகள் சலிக்க வேண்டும்

அக்கணத்தில் மின்னலென ஒரு ஒளிப்பிழம்பு அங்கு தோன்றுகிறது. அங்கு நாராயணன் நின்றுகொண்டிருக்கிறார். ‘இதோ, இப்போதே தந்தேன் என் குழந்தாய்,’ என்று கனிவு ததும்பும் குரலில் சொல்கிறார் மாலவன். காலம் பொய்யாய்ப் போகும் அதிசயம் அங்கே நடக்கிறது.

இந்தத் தரிசனம் கிடைப்பதற்கு என்னென்ன அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்?

1) மனத்தின் கருத்துக்கள் சலித்துப் போகவேண்டும்
2) இதயத்தில் ஆழமான எல்லையற்ற ஏக்கம் வேண்டும்
3) அமைதியின்மை கடந்த பொறுமை வேண்டும்
4) அசைக்க முடியாத ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும்
5) விடாமுயற்சி வேண்டும்
6) மனமடங்கிய பணிவு வேண்டும் உடலில்தான் உயிர்ச்சக்தி வேர்கொண்டிருக்கிறது. புலன்கள், மூளை, நரம்பு மண்டலம், எல்லாம் உடலைச் சார்ந்துதான் இருக்கின்றன.

உடல் இல்லையேல் உலகம் என்னும் அனுபவம் இருக்காது. மன இயக்கங்கள் இருக்காது. உலகமும் மனமும் இல்லாமல் தான் இருப்பதை அறிய முடியாது. உடல்தான் மெய்ஞ்ஞானத்தை அடைவதற்கான சாதனம். அதனால் உடலைப் பேணிக் காக்கவேண்டும்.

இதனால்தான், உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திறம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
- என்று நேரடியாகச் சொல்லிவைத்திருக்கிறார் திருமூலர்.

இதெல்லாம் இருந்தால் கதவு திறந்துவிடுமா? திரை விலகிவிடுமா? உத்தரவாதம் உண்டா? கிடையாது. மனித மனம் சற்றும் அறியாத இலக்கணவிதிகளின்படிதான் இந்த விழிப்பு கைகூடும். அறையின் கதவுகள், சாளரங்கள் எல்லாம் மூடியிருக்கின்றன. உள்ளே இருட்டாக இருக்கிறது. கதவைத் திறந்தால் வெளிச்சம் வந்துவிடுமா? இரவு நேரமாக இருந்தால் எப்படி வெளிச்சம் வரும்? ஆனால் கதவுகளைத் திறந்துவைக்கவில்லையானால் வெளியே சூரியன் உதித்தாலும் உள்ளே ஏது வெளிச்சம்? கதவுகளைத் திறந்து வைப்பது நம் வேலை. சூரியன் உதிக்கும்போது உள்ளே வெளிச்சம் நிறையும். எப்போது சூரியன் உதிக்கும்? அது நமக்குத் தெரியாது. நம் வேலையை நாம் செய்வோம். அவ்வளவுதான்.

(வேலையைத் தொடர்வோம்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: sindhukumaran2019@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x