முல்லா கதைகள்: குறுக்கு வழி

முல்லா கதைகள்: குறுக்கு வழி
Updated on
1 min read

ஒரு அழகான காலை பொழுதில் முல்லா வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, காட்டு வழி குறுக்குப் பாதையில் வீட்டுக்குச் செல்லலாம் என்று அவருக்குத் தோன்றியது.

‘இயற்கையுடன் பேசியபடி, பறவைகளைப் பாடல்களைக் கேட்டபடி, மலர்களை ரசித்தபடி பயணம் செய்யும் வாய்ப்பிருக்கும்போது, நான் ஏன் தூசு பறக்கும் நீண்ட சாலை வழியாக வீட்டுக்குச் செல்ல வேண்டும்?’ என்று எண்ணினார் முல்லா. ‘இந்த நாள் உண்மையிலேயே அதிர்ஷ்டகரமான நாள். நல்வாய்ப்புகளைக் கொண்ட நாள்!’ என்று நினைத்தார் அவர்.

இப்படி எண்ணியபடி, அவர் காட்டுக்குள் நடக்கத் தொடங்கினார். அவர் சிறிது தூரம்கூடச் செல்லவில்லை. அதற்குள் ஒரு குழிக்குள் விழுந்துவிட்டார். குழிக்குள் இருந்தபடி தன் எண்ணங்களை அசைபோட்டார்.

‘என்ன இருந்தாலும் இன்றைய நாள் அவ்வளவு அதிர்ஷ்டகரமான நாள் இல்லை போலும், இன்னும் சொல்லப்போனால், நான் இந்தக் குறுக்கு வழியைத் தேர்வுசெய்தது நல்லதாகப் போயிற்று.

இவ்வளவு அழகான காட்டுக்குள்ளேயே இப்படி நடக்கிறது என்றால், அந்த மோசமான நெடுஞ்சாலையில் எனக்கு என்ன நேர்ந்திருக்கும்?’ என்று நினைத்தார் முல்லா.

- யாழினி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in