Published : 26 Sep 2019 10:50 AM
Last Updated : 26 Sep 2019 10:50 AM

வார ராசிபலன் 26-09-2019 முதல் 02-10-2019 வரை (துலாம்  முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் தனாதிபதி செவ்வாயின் சஞ்சாரம் பணவரவை அதிகப்படுத்தும். அதே நேரத்தில் சுப விரயமும் உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நடந்து முடியும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும். தள்ளிப்போன பதவி உயர்வு, நிலுவைப் பணம் வந்து சேரலாம். கணவன் மனைவி பரஸ்பரம் சேர்ந்தெடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.

பெண்களுக்கு, பணவரவு திருப்தி தரும். கலைத் துறையினருக்கு, சக கலைஞர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அரசியல்வாதிகள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயமாகும். மாணவர்களுக்கு, சாமர்த்தியமான பேச்சால் மற்றவர் மனத்தில் இடம்பிடிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெள்ளை. எண்கள்: 2, 5, 6.
பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமையன்று தீபமேற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த காரியத்தைச் செய்துமுடிப்பதில் வேகம் இருக்கும். உங்கள் வாக்குவன்மை அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களைக் கையாளும் போதும் கவனம் அவசியம். தடங்கல்கள் அகலும். பணவரவு கூடும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீரப் பாடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.

செயல் திறன் அதிகரிக்கும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எதிர்கால நலனுக்காகப் பாடுபடுவீர்கள். பெண்களுக்கு, உங்களது செயல்களில் மற்றவர்கள் குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, சுக்கிரன் சஞ்சாரத்தால் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். அரசியல்வாதிகளுக்கு, மனம் வருந்தும் சூழ்நிலை ஏற்படும். நிலுவைப் பணம் வந்துசேரும். மாணவர்களுக்கு, செயல் திறன் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்.
எண்கள்: 2, 9. பரிகாரம்: மாரியம்மனைத் தீபம் ஏற்றி வணங்க எல்லாப் பிரச்சினைகளும் தீரும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் தனாதிபதி சனி ராசியில் சுக்கிரன் சாரம் பெற்று சஞ்சரிக்கிறார். பணவரவு திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்துச் செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போது வாகனங்களை ஓட்டும் போதும் எச்சரிக்கை வேண்டும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வதும், வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நல்லது.

பெண்களுக்கு, எடுத்த காரியத்தை வெற்றிகரமாக்கக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு, சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகளுக்கு, வளர்ச்சிக்காகச் சில திட்டங்களைச் செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். செயல்திறன் கூடும். மாணவர்களுக்கு, சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 1, 3, 6. பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து சிவனை வணங்குவது நன்மையைத் தரும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி சனி விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வீண் செலவுகள் ஏற்படும். எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் அதிக முயற்சி தேவைப்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் சங்கடத்துக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பாடுபடுவீர்கள். பெண்களுக்கு, விருப்பம் இல்லாத பயணம் நேரிடலாம்.

வீண் மன சங்கடத்துக்கு ஆளாகலாம். கலைத் துறையினருக்கு, கடன் விவகாரங்களில் கவனம் தேவை. கூடுதல் தொழில் தொடங்குவதற்கான காரியங்கள் நடக்கும். அரசியல்வாதிகள், மேலிடத்துக்குப் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு, விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாகத் தோன்றினாலும் கவனமாகப் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை.
எண்கள்: 2, 5, 6. பரிகாரம்: சனிக்கிழமையன்று சனிபகவானுக்கு எள் சாதம் நைவேத்தியம் செய்து காகத்துக்கு வைக்கப் பிணிகள் நீங்கும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் பயணங்கள் வெற்றியடையும். அதிகமான உழைப்பால் அலைச்சல், உடல்நலக்கேடு ஏற்படலாம். சுபச்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் இணக்கமான போக்கு காணப்படும்.

பெண்களுக்கு, வீண்கவலைகள், எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். கலைத் துறையினருக்கு, திடீர் மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அரசியல்வாதிகள், பேச்சில் கடுமையைக் காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத் தொடர்பில் மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள், உறவினர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது. மாணவர்களுக்கு, கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: நீலம், பச்சை.
எண்கள்: 2, 3, 6.
பரிகாரம்: விநாயகப் பெருமானைத் தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் காரிய வெற்றி கிடைக்கும். ராசியாதிபதி குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். அவர் ராசியைப் பார்ப்பதால் நிலுவைப் பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்கத் திட்டமிட்டிருந்த வாகனம், சொத்துகளை வாங்குவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் வேலைப்பளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் அறிவுத்திறன் அதிகரிக்கும். பெண்களுக்கு, பயணங்களால் நன்மை உண்டாகும். கலைத் துறையினருக்கு, எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாகத் தப்பித்துக்கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு, வளர்ச்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். மாணவர்களுக்கு, கஷ்டமாகத் தோன்றிய பாடங்களை எளிதாகப் படித்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.
திசைகள்: வடக்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 1, 3, 6.
பரிகாரம்: நரசிம்மரை வணங்கினால் மனச்சாந்தி கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x