Published : 05 Sep 2019 11:14 AM
Last Updated : 05 Sep 2019 11:14 AM

வார ராசி பலன்கள் செப் 05 முதல் 11 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் விரையஸ்தானத்துக்கு மாறினாலும் அவருடைய சார சஞ்சாரத்தால் மனதில் நிம்மதி உண்டாகும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர்க் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் மற்றவர்கள் வலுக்கட்டாயமாகப் பேசுவார்கள்.

கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு, எந்த ஒரு வேலையையும் அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாகக் கவனிப்பது நன்மை தரும். கலைத் துறையினருக்கு, எல்லா நன்மைகளும் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு மனதில் இருந்த கலக்கம் அகலும். மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 2, 5, 6.
பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை வணங்கி வர குடும்பப் பிரச்சினை தீரும். காரிய வெற்றி உண்டாகும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் ராசியை நான்காம் பார்வையால் பார்க்க - ராசியில் குரு இருக்க என அற்புதமான காலகட்டத்தில் இருக்கிறீர்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பெண்கள், கோபத்தைக் கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நன்மை தரும்.

கலைத் துறையினர் மன நிறைவடைவதற்காகக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடையலாம். எடுத்துக்கொண்ட வேலைகளில் வேண்டாத பிரச்சினை தலைதூக்கலாம். மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் பாடங்களைப் படிப்பது அவசியம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: பச்சை, மஞ்சள்.
எண்கள்: 3, 9.
பரிகாரம்: ஸ்ரீபைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன அமைதி கிடைக்கும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் சனி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் பயணிக்கிறார். மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் ஏற்படும். பணவரத்து கூடும். காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். பொருளாதார நிலை உயரும். பணி உயர்வு சம்பந்தமான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.

திருமண முயற்சிகள் கைகூடும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதை கழிப்பீர்கள். பெண்களுக்கு, மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். கலைத் துறையினருக்கு, யாரிடமும் வீண் சண்டையைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் வீண் அலைச்சலைத் தவிர்த்து எடுத்துக்கொண்ட காரியங்களில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்.
எண்கள்: 3, 6, 7.
பரிகாரம்: விநாயக பெருமானைத் தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரியத் தடைகள் நீங்கும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் தனது மூன்றாம் பார்வையால் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தைப் பார்க்கிறார். வீண்செலவு ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பெண்களுக்கு வீண் அலைச்சல், வேலைப் பளு ஆகியவை அதிகரிக்கும்.

வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். கலைத் துறையினருக்கு, புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடுவது நல்லது. அரசியல்வாதிகள் பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். மாணவர்கள் அடுத்தவரைப் பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றைத் தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், சனி.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: நீலம், கரும்பச்சை.
எண்கள்: 5, 7.
பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு பானகம் நிவேதனம் செய்து வழிபட காரிய வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சனி பகவான் வக்ர நிவர்த்தியாகி தனது மூன்றாம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்க்கிறார். பொருளாதாரத்தில் தகுந்த உயர்வு உண்டாகும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். அவர்களால் சந்தோஷம் கிடைக்கும்.

கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு திறம்படச் செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். கலைத் துறையினருக்கு, பிரச்சினை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அரசியல்வாதிகள் வழக்கத்தைவிடக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள்வரத்து கூடும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.
திசைகள்: மேற்கு, கிழக்கு.
நிறங்கள்: நீலம், பச்சை
எண்கள்: 2, 6.
பரிகாரம்: குல தெய்வத்தைப் பூஜித்து வணங்கிவர எல்லாத் தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியைச் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் பார்க்கிறார்கள். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர்ப் பிரச்சினைகள் தலைதூக்கலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம்.

பெண்களுக்கு, எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும். கலைத் துறையினருக்கு, காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாகப் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். மாணவர்களுக்கு, எப்படிப் பாடங்களைப் படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 1, 3, 7.
பரிகாரம்: முருகனை வணங்க குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை தீரும். காரியவெற்றி உண்டாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசையின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x