

கோவில்பட்டி கொண்டைய ராஜுவின் கடவுள் பட காலண்டர்களை யார் பார்த்தாலும் சாட்சாத் அந்த கடவுளே தன் வீட்டுக்குள் எழுந்தருளி விட்டதாக பிரமை கொள்வார்கள். பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். நவீன தொழில்நுட்பத்தின் வருகையால் இதுபோன்ற படகாலண்டர்கள் பயன்பாடு குறைந்துவிட்டது. கொண்டைய ராஜூ 1898-ம் ஆண்டு நவ.7-ல் பிறந்தார். பூர்வீகம் ஆந்திரா, தாய்மொழி தெலுங்கு. ஆனாலும் சித்திரங்களுக்கு மொழி எதற்கு? சித்திரங்கள் வரையும் பரம்பரையில் பிறந்தவர்தான் கொண்டைய ராஜு.
இவரது ஓவிய நுட்பங்களை முதன்மை சீடர்களான டி.எஸ்.சுப்பையா, எஸ்.மீனாட்சி சுந்தரம், மு.ராமலிங்கம், டி.எஸ்.அருணாச்சலம், மு.சீனிவாசன், ஜி.செண்பகராமன் ஆகியோர் கற்றுத் தேர்ந்தனர். இவர்கள் தாமே வரைந்த ஓவியங்களில் குருநாதரின் கையெழுத்தைப் பிரதானமாக போட்டு கீழே தங்களின் பெயரைக் குறித்தனர். கோவில்பட்டி கலைஞர்கள் பாணி என்ற பாணியே உருவாகி விட்டது. கொண்டைய ராஜுவின் சீடரான டி.எஸ்.சுப்பையாவின் மகன் மாரீஸ் பல அரிய தகவல்களை தெரிவிக்கிறார்.