

அம்மனின் சக்தி பீட வரிசையில் திருவொற்றியூர் திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் கோயில் இஷு சக்திபீடமாகப் போற்றப்படுகிறது. சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 253-வது தேவாரத் தலம் ஆகும். பிரளய காலத்தில் உலகம் அழிவுற்று, மீண்டும் புதிய உலகம் தோற்றுவிக்கப்படும். அப்போது பிரம்மதேவர் தோன்றி, உயிர்களைப் படைப்பார்.
ஒரு பிரளய காலம் வந்த சமயத்தில், உலகம் அழிவதை பிரம்மதேவர் விரும்பவில்லை. அதனால் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தார். யாகத்தின் இடையே அக்னி வடிவில் தோன்றிய சிவபெருமான், உலகம் அழியாமல் காப்பதாக உறுதி அளிக்கிறார். அதன்படி லிங்க ரூபமாக எழுந்தருளினார். யாக குண்டம் கோயிலாக உருவானது.