

ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 46-வது சிவத்தலமாகும். இத்தலம் அகத்தியர் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டது, சிறப்புலி நாயனார் அவதரித்தது, மார்க்கண்டேயர் வழி பட்டது போன்ற சிறப்புகளுக்குரிய தலம்.
கோச்செங்கண் சோழனால் இக்கோயில் கட்டப்பட்டது. இச்சோழன் சங்ககாலத்தைச் சேர்ந்தவன் என்றும், பிற்காலத்தைச் சேர்ந்தவன் என்றும் இரு கருத்துகள் நிலவுவதால் இம்மாடக் கோயில் கட்டப்பட்ட காலத்தை கணக்கிட முடியவில்லை. இத்தல வரலாறு இரண்டு விதமாகக் கூறப்படுகிறது. திருஆக்கூரை பிறப்பிடமாகக் கொண்டவரான சிறப்புலி நாயனார் சிவனடியார்களுக்கு உணவு கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம் 1,000 அடியார்களுக்கு உணவளிக்க விரும்பி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். 999 அடியார்கள் வந்தனர்.