

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள திருமயிலாடி சுந்தரேசர் கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. புராண காலத் தொடர்புடைய கோயிலாக இக்கோயில் போற்றப்படுகிறது. திருக்கயிலையில் பார்வதி தேவியை சீண்டிப்பார்க்க நினைத்த சிவபெருமான், ‘இணையில்லாத பேரழகு வடிவானவன் நான்தான்’ என்கிறார். உமாதேவியோ, ‘இல்லையில்லை.
நானே அழகில் சிறந்தவள்’ என்று பதில் கூறுகிறார். யார் அழகு? என்ற விவாதம் தொடர ஒரு கட்டத்தில் சிவபெருமான் கோபமாகி மறைந்து போகிறார். பெருமானைக் காணாமல் தவித்த உமாதேவி தன் தவறை எண்ணி வருந்துகிறாள். எம்பெருமானை எப்படி வரவழைக்க வேண்டும் என்ற வித்தை தெரிந்த உமாதேவி, உடனே அழகிய மயில் வடிவம் எடுத்து, கண்ணுவாச்சிபுரம் என்ற தலத்துக்குச் சென்று ஈசனை வழிபடுகிறாள்.