

நரசிம்மர் கோயில்களில் மிகப் பெரிய உருவம் கொண்ட கோயிலாக யானைமலை யோக நரசிம்மர் கோயில் விளங்குகிறது. இங்கு அருள்பாலிக்கும் பெருமாள், மனதில் இருக்கும் மூர்க்கத்தனத்தை நீக்கி மன அமைதிக்கு வித்திடுவார் என்பது ஐதீகம். உரோமச முனிவர் பல காலமாக குழந்தை வரம் இன்றி வருந்தினார். அதற்காக யாகம் செய்ய முடிவு செய்தார். உடனே அவருக்கு பிரகலாதன் நினைவுக்கு வர, அவனது உயர்வுக்கு காரணமான நரசிம்மரை மனதில் தியானித்தார்.
சக்ர தீர்த்தத்தில் நீராடி, நரசிம்மரை நோக்கி தவம் புரிந்தார். அவருடைய அவதார காலத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே அவரை தரிசிக்க விரும்பினார். அவரது தவத்தின் பயனாக நரசிம்ம மூர்த்தி அங்கே தோன்றினார். உக்கிரரூபத்தில் தோன்றியதால் அனைவரும் நடுங்கினர். அவரது உக்கிரத்தை தணிப்பது குறித்து உரோமச முனிவர் யோசனை செய்தார். பிரகலாதனை அழைத்ததால் நரசிம்மரின் உக்கிரம் சற்றே தணிந்தது. ஆனால் முழுவதும் சாந்தம் அடையவில்லை.