

தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும், சோழநாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 37-வது தலமாகவும் விளங்கும் திருக்கோடிக் காவல் திருக்கோடீஸ்வரர் கோயில், கர்மவினைகளைக் களையும் தலமாகப் போற்றப்படுகிறது. திருக்கடையூரில் கால சம்ஹாரம் நடந்த பிறகு, யமதர்மன் தன்னுடைய சக்தியை இழந்து அனைத்தும் சிவத்துக்குள் அடக்கம்' என்கிற தத்துவத்தை உணர்ந்து பிரம்புக் காட்டுக்குள் உறைந்திருக்கும் லிங்கத் திருமேனிக்குள் ஐக்கியமாகி அசைவற்று இருந்தார்.
காலன் இயக்கமற்று இருப்பதால் பூலோகத்தில் ‘மரணம்' என்ற நிகழ்வு நின்று விட்டது. பிறப்பு மட்டுமே நிகழ்த்து கொண்டிருந்ததால் பூமித்தாய் பாரம் தாங்காமல் தவித்தாள். சகல பூலோக காரியங்களும் முரண் பட்டதால் பூமி தடுமாறத் தொடங்கியது.