

திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற தலமாக விளங்கும் கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோயிலில், ஈசன் கேட்ட வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக எழுந்தருளியுள்ளார். மாசி மகத்தன்று ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்தால், லிங்கத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவம் தெரிவதைப் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒரு சமயம் இந்திரனின் சபையில் ரம்பை முதலிய ஏழு தேவலோக மங்கைகள் நடனமாடிக் கொண்டிருந்தனர். நடனம் முடிந்ததும், ரம்பை களைப்புடன் அருகில் இருந்த பூஞ்சோலையில் உறங்கினாள். அப்போது அவளது ஆடை சற்று விலகியிருந்ததைப் பார்த்த நாரத முனிவர், ரம்பையை பூலோகத்தில் மானிடப் பெண்ணாக பிறக்கும்படி சபித்தார். பூமிக்கு வந்த ரம்பை, இத்தலத்தில் ( கோட்டூர் ) வழிபாட்டுக்காக ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி, சிவனை பூஜித்தபின், இடது கால் ஊன்றி, வலது கால் மடித்து, உள்ளங்காலில் இடது கையை வைத்து, வலது கையை தலைமேல் வைத்தபடி அக்னியில் நின்று தவம் செய்தாள்.