

அபிஷேகப் பிரியரான சிவபெருமான் மிக விரைவில் ஆனந்தம் அடைந்து அருள் வழங்குபவர். சிவனின் அடையாளங்களுள் ருத்ராட்சம், திருநீறு, பஞ்சாட்சர மந்திரம் தவிர வில்வமும் ஒன்று. சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை மிகவும் பிடித்தமானது. சிவ பூஜைக்கு வில்வமே பிரதானமான ஒன்று. ஒரு வில்வதளம் பல ஸ்வர்ண புஷ்பங்களுக்குச் சமமானது.
மூவிலைகளைக் கொண்டதும், முக்குணங்களைக் குறிப்பதும், முக்கண்களைக் குறிப்பதும், திரிசூலத்தைக் குறிப்பதும், மூன்று ஜென்ம பாவங்களை எரிப்பதுமாகிய வில்வ இலையை சிவனுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று பக்தர்கள் இந்த இலையை ஈசனுக்கு படைப்பதுண்டு.
சிவபெருமானைத் துதித்து ஒரு வில்வ இலையைச் சமர்ப்பித்தாலும் பாவங்கள் விலகி, நன்மைகள் ஏற்படும். வீட்டில் பூஜை செய்ய இயலாதவர்கள், சிவன் கோயிலுக்குச் சென்று வில்வத்தால் வழிபட்டால் சகல சௌபாக்கியத்தையும் அடைவர். வில்வ சமித்துகளால் ஹோமம் செய்தால் செல்வத்தை அடையலாம். வில்வ மரத்தடியில் ஜபம் செய்தல் மிகவும் நன்று. வில்வமர பிரதட்சணம் செய்வது மஹா புண்ணியத்தை தர வல்லது.