

‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்கிற முதுமொழிக்கு ஏற்ப இறைவனை சரண் புகுந்தால், அனைத்து இன்னல்களும் களையப்படும் என்பதை சரணாகதி தத்துவத்தின் வாயிலாக பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடி ஆழ்வார், வேதாந்த தேசிகர், கம்பர் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.
தனக்கு தீங்கு செய்தவனை மாய்த்துவிட வேண்டும் என நினைப்பது மனிதனின் இயல்பு. தீயவற்றை செய்தும், பாவங்களை செய்தும், தன்னையே கொல்ல வருவதாக இருந்தாலும், தனக்கும், தர்மத்துக்கும் பலவகைகளில் தீங்கு இழைத்திருந்தாலும் அந்த செயல்களுக்கு எல்லாம் வருந்தி, தன்னையே பக்தியோடு ஆத்ம நிவேதனமாக சமர்ப்பிப்பவனை (சரணாகதி) மன்னித்து, காத்து, மோட்சத்தை அளிப்ப வன்தான் இறைவன். அவனின் திருவடியைப் பற்றினால் தான் மோட்சம். இதையே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் உபதேசித்துள்ளார். தன்னிடம் சரணடைந்தவர்களை பாவங்களிலிருந்து விடுபட்டுக் காப்பேன் என்கிற பொருளில் கூறியுள்ளார்.