

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆதிரத்னேஸ்வரர் கோயிலில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சூரிய பூஜை நடைபெறும் கோயில்களில் இத்தலமும் ஒன்று. ஆதியாகிய சூரிய பகவான் நீல ரத்தினக் கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால் ஆதிரத்னேஸ்வரர் என்ற பெயர் பெற்றார். உச்சி காலத்தில் பாலாபிஷேகம் செய்யும்போது ஈசன் நீல நிறத்தில் தோன்றி அருள் பாலிப்பார். ஈசனின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் இது 199-வது தேவாரத் தலம் ஆகும்.
ஒரு சமயம் துர்வாச முனிவருடைய ஆசிரமத்தில், வருண பகவானுடைய மகன் வாருணி தங்க நேர்ந்தது. அவனுடன் அவனுடைய நண்பர்கள் சிலரும் தங்கினர். அச்சமயத்தில் துர்வாச முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். வாருணியின் நண்பர்கள் சிறுபிள்ளைத்தனமாக ஆசிரமத்தில் உள்ள பூ, பழங்களை அங்கும் இங்கும் வீசி, முனிவரின் தவத்தைக் கலைத்தனர்.