

திண்டிவனம் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோயில், திருமண வரம் அருளும் தலமாக புகழப்படுகிறது. இத்தல அனுமன் சங்கு, சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. திருமால் மனித உடலும், சிங்கத்தலையும் கொண்டு, நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார். ‘நரன்’ என்றால் ‘மனிதன்’. ‘சிம்மம்' என்றால் சிங்கம். நரசிம்மரின் கோபத்தால் உலகம் நடுங்கியது.
இதையறிந்த மார்க்கண்டேய மகரிஷி, நரசிம்மரின் கோபம் தணிந்து, சாந்த சொரூபியாக அருள்பாலிக்கும்படி மகாலட்சுமியை வேண்டினார். தாயார் பெருமாளின் சினம் தணியும் வகையில் ஆசுவாசப்படுத்தினாள். இதன் அடிப்படையில் லட்சுமியை மடியில் இருத்திய நரசிம்மர் வழிபாடு உருவானது.