

இந்து சமயத்தின் மிக முக்கியமான அடிப்படை நூல்களான பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை உணர்த்தும் அத்வைத தத்துவத்தை உலகுக்கு அளித்தவர் ஆதிசங்கரர். இந்து மதத்தின் சிற்பி என்று அறியப்படும் இவர், நான்கு திசைகளிலும் மடங்களை நிறுவி, இந்து தர்ம சாஸ்திரங்களை போதிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
கேரள மாநிலத்தில் உள்ள ‘காலடி’ என்ற ஊரில் சிவகுரு - ஆர்யாம்பாள் தம்பதியின் மகனாக வைசாக சுக்ல பஞ்சமியில் ஆருத்ரா நட்சத்திரத்தில் அழகும் அருளும் நிறைந்த ஞானக் குழந்தையாக சங்கரர் அவதரித்தார். இளம் வயதில் கௌடபாதரின் சீடர் கோவிந்த பகவத் பாதரிடம் வேதாந்த, அத்வைத தத்துவங்களைப் பயின்ற சங்கரர் பின்னாட்களில் மெய்ஞான வல்லுநராகத் திகழ்ந்தமையால், ‘ஆதிசங்கர பகவத் பாதர்’ என்று அழைக்கப்பட்டார்.