Published : 24 Apr 2025 06:49 AM
Last Updated : 24 Apr 2025 06:49 AM

ராகு - கேது தோஷம் போக்கும் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர்

திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில், ராகு - கேது தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. ஈசன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கும் இத்தலத்தில் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்றுள்ளனர். தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இத்தலம் 59-வது தலம் ஆகும். இத்தலத்தைப் போற்றி, அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடியுள்ளனர்.

ஒருசமயம் கைலாயத்தில் விநாயகப் பெருமான், சிவபெருமானை வணங்கிக் கொண்டிருந்தார். அவர் கழுத்தில் இருந்த பாம்பு, தன்னையும் விநாயகர் வழிபட்டதாக நினைத்துக் கொண்டது. இதில் கோபமடைந்த சிவபெருமான், நாகர் இனம் முழுவதும் சக்தியை இழக்க சாபமிட்டார். அஷ்டமகா நாகங்கள், ராகு, கேதுவும் தங்கள் இனத்தில் ஒருவர் செய்த தவறுக்காக, மற்றவர்களை தண்டிக்கக் கூடாது என்று சிவபெருமானிடம் வேண்டினர்.

மகாசிவராத்திரி தினத்தில் நாகர்களின் தலைவன் ஆதிசேஷன் தலைமையில் அனந்தன், வாசுகி, சங்க பாலம், குளிகன், மகாபத்மன், பத்மன், கார்கோடகன், தட்சகன் ஆகிய நாகங்கள் திருப்பாம்புரம் வந்து சாபவிமோசனம் பெறலாம் என்று சிவபெருமான் அருள்பாலித்தார்.

மற்றொரு சமயத்தில் வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் தங்களுக்குள் யார் பலசாலி என்ற போட்டி ஏற்பட, வாயு பகவான் தன் வலிமையால் மலைகளை புரட்டிப் போட்டார். ஆதிசேஷன் தன் வலிமையால் அதை தடுத்தது. கோபம் கொண்ட வாயுபகவான், உயிர்களுக்கு வழங்கும் பிராணவாயுவை நிறுத்தினார். இதன் காரணமாக உயிரினங்கள் சோர்வடைந்தன.

தேவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி, ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கி, திருப்பாம்புரம் வந்தடைந்து ஈசனிடம் மன்னிப்பு கோரியது. ராகு காலத்தில் இத்தலத்தில் வழிபட்டால் 264 வகையான பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 ஆண்டு ராகு தசா புக்தி நடந்தால், லக்னத்துக்கு 2 மற்றும் 8-ல் ராகு அல்லது கேது இருந்தால் இத்தலத்தில் பரிகாரம் செய்தால் நல்லது நடக்கும். இழந்த பதவி, பொருள், நிலம் ஆகியவற்றை மீட்கலாம்.

தென்காளஹஸ்தி என்று அழைக்கப்படும் இத்தலத்தில் வழிபாடு செய்தால் திருக்குடந்தை, திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி ஆகிய திருத்தலங்களில் வழிபட்ட பலன் கிடைக்கும்.

இந்த ஆண்டில் வாக்கியப் பஞ்சாங்கப்படி, சித்திரை 13-ம் தேதி (26-04-2025, சனிக்கிழமை) மாலை 4.20 மணிக்கு ராகுபகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேதுபகவான், கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் இடம் பெயர்வதால், இத்தலத்தில் ஏப். 26, 27-ம் தேதிகளில் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு யாகம், அபிஷேகம், அர்ச்சனை ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களுக்கு, 8754756418 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x