

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ராமசுவாமி பெருமாள் கோயிலில் ராம சகோதரர்கள் நால்வரும் அருள்பாலிக்கின்றனர். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் வீணையுடன் காட்சி தருவது சிறப்பு. தென்னக அயோத்தி என்று போற்றப்படும் இக்கோயிலை 400 ஆண்டுகளுக்கு முன்பு ரகுநாத நாயக்கர் என்ற மன்னர் கட்டினார்.
அயோத்தி மன்னர் தசரதருக்கு நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லை. இதுகுறித்து தனது குலகுரு வசிட்ட முனிவரிடம் ஆலோசனை கேட்டார் தசரத மன்னர். குலகுருவும், புத்திர காமேஷ்டி யாகம் செய்யும்படி கூறினார். அதன் பலனாக திருமாலே அவருக்கு குழந்தையாக அவதரித்தார். சைத்ர மாதம் வளர்பிறை நவமி திதி, புனர்பூசம் நட்சத்திரத்தில் ஸ்ரீராமபிரான் கவுசல்யா மூலம் அவதரித்தார்.