

தோரணமலையின் பெருமை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பரவியுள்ளது. முருகப் பெருமான் வீற்றிருக்கும் ஆன்மிகமலையில் அறப்பணிகள் நடைபெற்று வருவது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் இயற்கை அழகுடன் அமைந்துள்ள குன்றுதான் இந்த தோரணமலை. இங்கு இயற்கையாக அமைந்த குகைக்குள் முருகப் பெருமான் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
உலகம் சமநிலை அடைய தென்திசை நோக்கி வந்த அகத்தியர் இம்மலையின் சிறப்பை கண்டு இங்கேயே மருத்துவ ஆராய்ச்சி மேற்கொண்டார். தன் சீடர்களுக்கு சகல பாடத்தையும் கற்பிக்கும் மாபெரும் பாடசாலையை இங்கு அமைத்தார். காசி வர்மன் என்ற மன்னனின் தலையில் புகுந்து அவரை அவஸ்தைக்கு உள்ளாக்கிய தேரையை கபால அறுவை சிகிச்சை செய்து அகற்றினார்.