

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் மறைவாழ்வில் முக்கியமான காலகட்டம் தவக்காலம். அதன் உச்சகட்டமே இறுதி வாரமான புனித வாரம் ஆகும். புனித வாரத்தின் தொடக்கமான ஞாயிறன்று குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கிறிஸ்தவர்கள் ஊர்வலமாகச் செல்வர். அன்றுதான் யேசுபிரான் சிலுவையில் அறையப்பட தன்னையே முன்வந்து ஒப்புக் கொடுக்க எருசலேம் நகரை நோக்கிப் பயணப்பட்ட நாளாகும்.
தனக்குச் சிலுவை மரணம் நேரப் போகிறது, அத்தருணத்தில் சீடர் மட்டுமல்லாது, குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு மகிழ்ந்து ஆரவாரம் செய்துகொண்டு தன்னுடன் ஓடிவரும் மக்களும் கூட தன்னை விட்டு விலகிவிடுவர் என்பதை அறிந்திருந்தும், கருணை பொங்கும் உள்ளத்துடன் தன்னையே அளிக்க மகிழ்ச்சியுடன் பயணிக்கிறார் யேசு பெருமான்.