

வன்னி மரக்கிளையாக வைகுண்டவாசன் அருள்பாலிக்கும் நொச்சிக்காடு கண்கொடுத்த நாச்சியப்ப பெருமாள் கோயில், அதிசயமிக்க கோயிலாகத் திகழ்கிறது. கண்நோய் தீர்க்கும் பெருமாளாக இவர் வழிபடப்படுவது தனிச்சிறப்பு. திருப்பாதிரிப்புலியூர் அருகே சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரை கிராமமாக நொச்சிகாடு விளங்கியது. இவ்வூரில் நொச்சி மரங்கள் அதிகம் காணப்பட்டதாக தெரிகிறது. அக்காலத்தில் இவ்வூரில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட 4 குடும்பத்தினர் மட்டுமே வசித்து வந்தனர்.
இவர்கள் திருமாலை இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தனர். ஆண்டுக்கு ஒருமுறை நடைபயணமாக திருப்பதி செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். சில காலம் அங்கேயே தங்கி திருப்பதியில் சேவகம் செய்து வந்தனர். அப்போது அவர்களில் ஒருவருக்கு திடீரென்று கண்பார்வை பறிபோனது. இதைக் கண்டு அஞ்சிய உறவினர்கள், வெங்கடவனிடம் பிரார்த்தனை செய்தனர்.