

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றில் பிரம்மாண்டமாகவும், சைவ சமயத்தில் தலைமை பீடமாகவும், சக்தி பீடங்களில் தாய் பீடமாகவும், பிறக்க முக்தி தரும் மூலாதார தலமாகவும் திருவாரூர் விளங்குகிறது. திருமாலை மணம்புரிய வேண்டி திருமகள் தவமியற்றிய தலம் திருவாரூர் ஆகும். திருவாரூர் தேர் அழகு என்பதற்கு ஏற்ப, உலகிலேயே பெரிய தேரும், அழகிய தேரும் கொண்ட திருத்தலம் திருவாரூர்தான்.
பஞ்சபூதத் தலங்களில் பிருத்வி (பூமி) தலமாக விளங்கும் இத்தலம், சப்தவிடங்கத் தலங்களின் தலைமை இடமாகத் திகழ்கிறது. பூலோக கயிலாயமாகவும், வினைதீர்க்கும் பரிகாரத் தலமாகவும் விளங்கும் தியாகராஜ சுவாமி கோயில் சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 150-வது தேவாரத் தலம் ஆகும். சமயக்குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் இத்தலம் போற்றி பாடப் பெற்றுள்ளது.