

விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் பகுதியில் சிறிய மலைக் குன்றின் மீது உள்ள முருகப்பெருமான் கோயில் சூரபத்மன் நல்லறிவு பெற்ற தலமாகப் போற்றப்படுகிறது. முருகப் பெருமானை அவர் ஏறி வரும் மயிலோடு தொடர்புபடுத்தியுள்ள தலம் இது ஒன்றே. மயில் போல் காட்சி தருவதால் இம்மலைக்கு ‘மயூராசலம்' என்று பெயர் வந்தது. அதுவே மருவி தற்போது, ‘மயிலம்' என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
முருகப் பெருமானுக்கு, தான் வாகனமாக வேண்டும் என சூரபத்மன் வேண்டினான். ‘வராக நதியின் வடகரையில் மயில் வடிவம் கொண்ட மலையாக நின்று தவமியற்றினால் உன் விருப்பம் நிறைவேறும்' என்றார் முருகப் பெருமான். அதன்படி மயில் உருவ மலையாகி சூரபத்மன் தவம் செய்த இடமே இத்தலம்.