

ராஜஸ்தானின் ஒரே கோடை வாசஸ்தலமாக மவுண்ட் அபு விளங்குகிறது. ஆரவல்லி மலைத் தொடரின் மலைப் பாதையில் உள்ள இந்நகரம் குறித்து ஸ்கந்த புராணம், மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அர்புடா என்று பண்டைய காலத்தில் அழைக்கப்பட்ட இவ்வூரில் அர்புதான்யா காடு இருந்தது. ராமபிரான் இவ்விடத்தில் படிப்பு மற்றும் பயிற்சியை பெற்றார் என்று உள்ளுர் வரலாறு தெரிவிக்கிறது.
நக்கி ஏரிக்கரையில் ரகுநாத் கோயில் உள்ளது. இக்கோயில் அறிஞர் ஸ்ரீரமானந்தரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 5-ம் நூற்றாண்டிலிருந்தே ரகுநாதர் என அழைக்கப்படும் ராமபிரானின் சிலை சம்பா குகையில் இருந்ததாகவும், ஸ்ரீரமானந்தர் அதனை நக்கி ஏரிக்கரையில் இருந்த கோயிலில் கொண்டு வந்து 1468-ல் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது.