

சேவாலயா முரளிதரன், தனக்கு ஆதர்ச புருஷர்களாக விளங்கும் சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, பாரதியார் ஆகியோர் பகவத்கீதை குறித்து எழுதியவற்றையும் பேசியதையும் கேட்கும்போது, தன் உள்ளத்தில் அலை அலையாக எழுந்த எண்ணங்களை காணொலி வாயிலாகப் பேசி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். அதன் தொகுப்பே `பாமரனின் பகவத்கீதை' என்னும் இந்நூல்.
சம்ஸ்கிருதத்தில் இருக்கும் பகவத்கீதையின் ஸ்லோகங்களின் மூலத்தைப் படித்து பல பண்டிதர்களும் அதற்கு விளக்கம் எழுதியுள்ளனர். `நான் பாமரன். என் உள்ளத்தில் பகவத்கீதை ஏற்படுத்திய தாக்கங்களைத்தான் பதிவு செய்திருக்கிறேன்' என்று தன்னடக்கத்துடன் நூலாசிரியர் குறிப்பிட்டிருந்தாலும், நூலின் பல இடங்களில் அறிவியல்பூர்வமான அவரின் அணுகுமுறையும் மேதைமையும் வெளிப்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, `செயலிலே செயலின்மை' என்பதற்கான விஞ்ஞானப்பூர்வமான விளக்கம், மூடநம்பிக்கையைப் பரப்பாத பகுத்தறிவுக்கு ஓர் உதாரணம்!