

சென்னை: யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில், சென்னையில் சிறப்பு சொற்பொழிவாற்றிய சுவாமி சிதானந்த கிரி, நாம் யார் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா (YSS) என்ற மத சார்பற்ற ஆன்மிக அமைப்பு, 1917-ம் ஆண்டு, பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்டது. அவரது உபதேச மொழிகளை உலகம் முழுவதும் உள்ள மக்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் 1920-ல் நிறுவப்பட்ட சுய -உணர்தல் பெல்லோஷிப்பின் (Self Realisation Fellowship -SRF) ஒரு பகுதியாக இந்த அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைவராக சுவாமி சிதானந்த கிரி உள்ளார்.
மேரிலாந்தில் உள்ள அன்னாபோலிஸில் 1953-ம் ஆண்டு பிறந்த சுவாமி சிதானந்த கிரி (கிறிஸ்டோபர் ஹார்ட்வெல் பக்லீ) சாண்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சமூகவியல், தத்துவ மாணவராக இருந்தார், 1970-ன் தொடக்கத்தில் பரமஹம்ஸ யோகானந்தரின் உபதேச மொழிகளால் ஈர்க்கப்பட்டு, 1977-ம் ஆண்டு என்சினிடாஸில் உள்ள எஸ்ஆர்எஃப் ஆசிரம மையத்தில் இணைந்தார். பல்வேறு பயிற்சிகளைப் பெற்ற பின்னர், மிருணாளினி மாதாவின் மறைவுக்குப் பிறகு (03-08-2017) ஒய்எஸ்எஸ் அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆன்மிகம் மற்றும் கிரியா யோகா தொடர்பாக சுவாமி சிதானந்த கிரியின் சிறப்பு சொற்பொழிவு, நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது: சென்னைக்கு அருகில் உள்ள பெரும்புதூரில் தற்போது புதிய ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளது. பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய கிரியா யோகம் மற்றும் அவரது அறிவுரைகளை பரப்புவதற்கு ஒய்எஸ்எஸ் அமைப்பு தீவிர அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறது. பரமஹம்ஸ யோகானந்தர் இயற்றிய ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ என்ற நூலை அனைவரும் படிக்க வேண்டும். ‘எப்படி வாழ்வது’ என்று அவர் கூறிய வழியில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும். எப்போதும் மாறிக் கொண்டிருக்கும் உலகில் யோகானந்தரின் அறிவுரைகள், ஒவ்வொருக்கும் ஆன்மிக பொக்கிஷங்களாக உள்ளன.
கிரியா யோக பயிற்சிகள், ஆன்மிக ஞானத்துக்கும் நவீனமய உலகில் வாழும் சமூகத்துக்கும் இடையே மிகப் பெரிய இணைப்புப் பாலமாக இருந்து வருகிறது. மனித வாழ்க்கை மகிழ்ச்சி, வெற்றி, அமைதி, தெய்வீக திட்டமிடல் ஆகியவற்றைக் கொண்டது. அதன்படி நாம் எப்படி வாழ்கிறோம் என்பது முக்கியம். முதலில் நாம் யார் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். நமக்குள் இருக்கும் இறைத்தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். மனித படைப்பின் நோக்கத்தை புரிந்து செயல்பட வேண்டும். பரமஹம்ஸ யோகானந்தரின் கிரியா யோக பயிற்சியால் நமக்கு எதுவும் சாத்தியமாகும்.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியின் நிறைவில் `ஒரு யோகியின் சுயசரிதம்’ ஆடியோ புக் (மலையாளம்), சுவாமி யுக்தேஸ்வர் கிரி அருளிச்செய்த ‘கைவல்ய தரிசனம்’ (The Holy Science) என்ற நூலின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிபெயர்ப்பு பிரதிகள், பரமஹம்ஸ யோகானந்தரின் ‘பரதத்துவ தியானங்கள்’ நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு பிரதி ஆகியன வெளியிடப்பட்டன. அனைத்து வெளியீடுகளும் ஒய்எஸ்எஸ் புக் ஸ்டோரில் (yss.org/Books) கிடைக்கின்றன. சொற்பொழிவு நிகழ்ச்சியில் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். காலை நிகழ்ச்சியாக 1,000 பக்தர்கள் கலந்து கொண்ட தியான வகுப்பு நடைபெற்றது. யோகதா சத்சங்க சகா ஆசிரமம் (சென்னை) தொடர்பான கூடுதல் தகவல்களை +917550012444 என்ற எண் மூலமாகவும், chennaiashram@yssi.org என்ற மின்னஞ்சல் மூலமாகவும் பெறலாம்.