

ஸ்ரீராம பாகவதரால் ஜனவரி 1924-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்பாத்தி தியாகராஜ ஆராதனை இன்றும் அவரது பேரன் உள்ளிட்ட உறவினர்களால் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் பழைய கல்பாத்தி சாலை ஸ்ரீராம பாகவதர் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாலக்காடு ராம பாகவதர் 1888-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஷோரனூருக்கு அருகில் உள்ள முண்டாய கிராமத்தில் ஸ்ரீகஸ்தூரி ரங்க ஐயர் – அலமேலு மங்கை தம்பதிக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார். இளம் வயது முதலே பாரத புழா நதிக்கரையில் அமர்ந்து தன்னுடைய மூத்த சகோதரர் வெங்கடகிருஷ்ண பாகவதருடன் சேர்ந்து இசை கற்கத் தொடங்கினார். கதகளி பதங்கள் மட்டுமின்றி பாரம்பரிய கர்னாடக இசையின் நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தார். வடக்கஞ்சேரி ராம பாகவதர் , சகோதரர் சுப்பராம பாகவதர், தொண்டிகுளம் அனந்தராம பாகவதர், மகா வைத்தியநாத பாகவதர், உமையாள்புரம் சுவாமிநாத ஐயர் ஆகியோரிடம் இசை பயின்று, இசை வல்லுநராகத் திகழ்ந்தார்.