

கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் ஸ்டார், கிறிஸ்துமஸ் பரிசு, கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை, கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் கேக் போலவே கிறிஸ்துமஸ் மரமும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறது. அதன் வரலாறோ மிகவும் சுவையானது.
இங்கிலாந்து நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் மரக்கிளைகளையும் பச்சை இலைக் கொத்துக்களையும் வீட்டு வாசலில் தொங்கவிட்டால் தீய ஆவிகள் அணுகாது என்னும் நம்பிக்கை ஆழமாக இருந்தது. இந்தப் பழக்கம் சீர்திருத்த கிறிஸ்தவ மதம் தோன்றிய பிறகு ஒழிந்தது. அப்படிப்பட்ட சீர்திருத்த கிறிஸ்தவ மதத்தைத் தோற்றுவித்தவரான மார்ட்டின் லூதர் என்ற பாதிரியாரால்தான் கிறிஸ்துமஸ் மரம் இயேசு பிறப்புக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புனித போனிபேஸ் என்ற பாதிரியார். கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நிலவிவந்த பல மூடநம்பிக்கைகளை அவர் கடுமையாகச் சாடியும் எதிர்த்தும் வந்தவர். ஊர் ஊராகச் சென்று மதப் பிரச்சாரம் செய்துவந்த அவர், ஓக் மரம் ஒன்றை மக்கள் வழிபடுவதைக் கண்டார். அச்செயலைக் கண்டு கடும்கோபம் கொண்ட அவர், அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார். அந்த மரம் மீண்டும் துளிர்த்துவிடாமல் இருக்க அந்த மரத்தின் வேர்ப்பகுதியையும் அங்கிருந்து பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தினார்.
ஆனால் மரம் இருந்த அதே இடத்திலிருந்து அடுத்த சில தினங்களிலேயே ஓக் மரக் கன்று முளைத்து விறுவிறுவென்று வளர்ந்து ஓராண்டு காலத்துக்குள்ளாக முன்பிருந்த மரத்தைப் போலவே கம்பீரமாக எழுந்து நின்றதை கண்ட மக்கள், அதை இயேசு உயிருடன் மீண்டெழுந்த உயிர்த்தெழுதலின் அடையாளமாக பார்க்கத் தொடங்கினார்கள். பாதிரியார் போனிபேஸ் தனது ஊழியத்தை முடித்துக்கொண்டு மீண்டும் அவ்வழியே திரும்பியபோது தாம் வெட்டிப்போட்ட இடத்தில் புதிய மரத்தைக் கண்டு வியந்து அதனடியில் முழந்தாளிட்டு ஜெபிக்கத் தொடங்கினார்.
இதனால் கிறிஸ்தவ வழிபாட்டில் பத்தாம் நூற்றாண்டில் ஓக் மரம், உயிர்ப்பின் அடையாளமாக இடம்பெறத் தொடங்கியது. ஆனால் கிறிஸ்துமஸ் மரமாக அது அப்போது உருப்பெறவில்லை. சீர்திருத்த கிறிஸ்துவ மதம் உருவாகக் காரணமாக இருந்த மார்ட்டின் லூதரும் ஒரு ஜெர்மானியப் பாதிரியார்தான். 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர், கிறிஸ்துமஸ் நெருங்கிக்கொண்டிருந்த ஒரு டிசம்பர் மாதத்தின் மத்தியில் பனி படந்த சாலை வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது சின்னச் சின்ன ஓக் மரங்களின் மத்தியில் வெண்பனி படர்ந்திருந்த ஃபிர் மரமொன்று வெளிச்சத்தில் தேவ அழகுடன் ஒளிர்வதைக் கண்டார். அதை அவர் ஓர் இறை தரிசனமாகவே கருதினார். இந்தக் காட்சியை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.
அடுத்த இரு வாரங்களில் வந்த கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல் நாள், தேவாலய வளாகத்தில் நின்றுகொண்டிருந்த அதேபோன்றதொரு ஃபிர் மரத்தைத் தொங்கும் மெழுகுவர்த்திக் கூண்டு விளக்குகளால் அலங்கரித்தார். அந்த வழக்கம் அதன் பிறகு ஜெர்மனி முழுவதும் பரவத் தொடங்கி பிறகு 16-ம் நூற்றாண்டில் உலகின் பல நாடு களுக்கும் பரவியது. ஓக் மற்றும் ஃபீர் மரங்களை கிறிஸ்துமஸ் சமயத்தில் அலங்கரிப்பதெற்கென்றே பிற நாடுகளிலும் மக்கள் அவற்றை வளர்க்கத் தொடங்கினார்கள். இப்படி வளர்க்க முடியாதவர்கள் செயற்கை யான கிறிஸ்துமஸ் மரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.