செல்வ செழிப்பு நல்கிடும் ஸ்ரீ பதஞ்சலி வியாக்ரபாத ஈஸ்வரர்

செல்வ செழிப்பு நல்கிடும் ஸ்ரீ பதஞ்சலி வியாக்ரபாத ஈஸ்வரர்
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்க நல்லூரில் உள்ள ஸ்ரீ பதஞ்சலி வியாக்ரபாத ஈஸ்வரர் கோயில், செல்வம் அளித்திடும் குபேர ஸ்தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் நடைபெறும் மடி நிரப்பும் விழாவில் எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்வது வழக்கம். ​

தாமிரபரணி பாய்ந்​தோடி வளப்​படுத்​தும் நதிக்​கரை​யில் அமைந்​துள்ள தலமாக செய்​துங்​கநல்​லூர் விளங்​கு​கிறது. இப்பகுதி பல நூற்​றாண்​டு​களுக்கு முன்பு அடர்ந்த வனப்​பகு​தியாக செழித்துக் காணப்​பட்​டது. அப்போது முரப்​பநாட்டை தலைநகர​மாகக் கொண்டு பூதலவீர உதய மார்த்​தாண்டன் என்ற மன்னர், நல்லாட்சி புரிந்து வந்தார். அவரது ஆட்சிக் காலத்​தில் பல்வேறு படையெடுப்புகள் நடத்தி வெற்றி கண்டார். இதனால் அவருக்கு செய்​துங்கன் என்ற பட்டப் பெயர் சூட்​டப்​பட்​டது.

ஒருசமயம் வேட்​டை​யாடு​வதற்கு மன்னர் இந்த வனப்​பகு​திக்கு வந்தார். அப்போது வனப்​பகு​தி​யின் உள்ளே கூழை​யாறு எனப்​படும் சிற்​றோடை​யில் நீர் சலசலத்து ஓடிக் கொண்​டிருந்​தது. அந்த ஆற்றுநீரில் மிதந்து வந்த சங்கி​லிருந்து பஞ்சாட்சர மந்திரமான ஓம் நமசிவாய என்ற மந்திர ஒலி இடைவிடாமல் ஒலித்​துக் கொண்​டிருந்​தது. அந்த நாத ஓசையில் மயங்கி நின்ற வேளை​யில், அருகில் இருந்த வெண்​தாமரைப் பூக்கள் நிறைந்த குளத்​தின் வடகரை​யில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து தவமுனிவர்கள் பதஞ்​சலி​யும், வியாக்​ர​பாதரும் மனம் ஒன்றி சிவ பூஜை செய்து கொண்​டிருந்​தனர்.

அப்போது அசரீரி ஒன்று ஒலித்​தது. அதன்​படி, புண்ணிய பூமியான இந்த இடத்​தில் சிவாலயம் ஒன்றை கட்டு​வதற்கு மன்னருக்கு உத்தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது. பரம்​பொருளின் திரு​ வுளப்படி இயற்கை வளம் செழிக்​கும் இப்பகு​தி​யில் கோயில் ஒன்றை கட்டி, தானங்கள் பல அளித்​தார். பின்னர், தனது பெயரால் செய்​துங்​கநல்​லூர் என்ற பெயரை​யும் அவ்வூருக்கு சூட்​டி​னார். முன்ன​தாக, இப்பகுதி திரு​வரங்க சதுர்​வேதி மங்கலம் என்ற பெயரால் அழைக்​கப்​பட்டு வந்தது. பதஞ்​சலி​யும், வியாக்​ர​பாதரும் நித்ய பூஜை செய்து வணங்கி வந்த​தால் இத்தல பரம்​பொருளுக்கு ஸ்ரீ பதஞ்​சலி, வியாக்​ரபாத ஈஸ்வரர் என்ற காரணப் பெயர் உண்டானது.

சில காலம் இத்தலத்​தில் தங்கி​யிருந்து விட்டு, முனிவர்கள் இருவரும் தில்லை அம்பல​வாணரின் திருநடனக் காட்​சி​யைக் காண தில்​லை​வனம் கிளம்​பிச் சென்​றனர். இவர்கள் முதலில் சிவபூஜை நடத்தி இத்தலத்​தில் வழிபட்ட காரணத்​தால் இவ்வூருக்கு ஆதி சிதம்​பரம், தென்​தில்லை என்ற வேறு பெயர்​களும் உண்டு. இரு முனிவர்கள் வழிபட்ட பெருமை கொண்​ட​தால், இன்றும் இங்கு அனைத்து விழாக்​களும் தொடங்​கப்​படு​வதற்கு முன்; இவர்​களுக்கே முதல் பூஜை செய்​யப்​படுவது வழக்​கமாக இருந்து வருகிறது.

தாரு​காவனத்​தில் ஒரு சமயம் ஆதிசேஷன் மேல் அனந்​தசயனம் கொண்​டபடி மகாவிஷ்ணு ஈஸ்வரனின் ஆனந்த தாண்டவ காட்​சி​யில் மனம் லயித்​திருந்​தார். அப்போது விஷ்ணுக்கு ஏற்பட்ட அளவில்லா ஆனந்​தத்​தால் ஆதிசேஷனுக்கு கூடு​தலான அழுத்தம் உண்டானது. இந்த திடீர் மாற்​றத்​துக்கான காரணத்தை விஷ்ணு​விடமே ஆதிசேஷன் கேட்டு அறிந்து கொண்​டது. உடனே தனக்​கும் அந்த ஆனந்த பரவசக் காட்சி தரிசனப் பேறு கிட்டு​வதற்கு வழி யாது என கேள்வி எழுப்​பியது.

அதற்கு பதில் உரைத்த விஷ்ணு, பூலோகத்​தில் மானிட​ராய் பிறந்​தால் அக்காட்​சி​யைக் காணலாம் என்றார். இந்த திருநடன காட்சியை காண்​ப​தற்​காகவே அத்ரி மகரிஷி, அனுசூயா தேவி​யின் இரண்​டாம் மகனாக இம்மண்​ணில் பிறந்​தார் ஸ்ரீபதஞ்​சலி. ஆதிசேஷனின் அவதா​ரமான இவரே யோக சூத்​திரங்​களின் தந்தை என அனைவ​ராலும் போற்​றப்​படு​கிறார். இவரைப் போலவே, மாசில்லா மலர்​களைப் பறித்து சிவபூஜை செய்​வதற்​கென்றே புலிநகம், புலிக்​கால்களை ஈசன் அருளால் பெற்​றவர் வியாக்​ர​பாதர்.

இந்த இரு தவமுனிவர்​களும் தாமிரபரணி நதி தீரத்​தில் கூழை​யாற்றுப் பகுதி​யில் தங்கி சிவபூஜை செய்து வந்த வேளை​யில்​தான் மன்னரை சந்தித்​தனர். மன்னர் கட்டிய கோயி​லில், தினமும் ஆறுகால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. பௌர்ணமி தோறும் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்​காரம் நடைபெறும்.

குறிப்​பாக, ஆடிப் பூர வளைகாப்பு விழா​வின்​போது சுமங்​கலிப் பெண்கள் பெரு​மள​வில் பங்கேற்பது வழக்​கம். மழலை வரம் வேண்டு​வோர் இங்கு நடைபெறும் மடிநிரப்பும் பூஜை​யில் நம்பிக்கையோடு கலந்து கொள்கின்றனர். வைகாசி விசாகத்​தில் முரு​க​னுக்கு பால்குட ஊர்வலம் வெகு பிரசித்தம். ஆனி மாதம் ஆஷாட நவராத்​திரியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு பத்து நாள் விழா நடைபெறும். கந்த சஷ்டி விழா ஏழு நாட்​களும் கோலாகலமாக கொண்​டாடப்​பட்டு வருகிறது.

கார்த்திகை சோமவாரம்​தோறும் 108 சங்காபிஷேக வழிபாடு நடைபெற்று, திருக்​கார்த்திகை தீபம் ஏற்றப்​படும். மார்​கழி​யில் திரு​வா​திரைத் திருநாள் பத்துநாள் உற்சவமாக கொண்​டாடப்​படு​கிறது. அது சமயம் தில்​லைக் கூத்தர் திருவீதி எழுந்​தருளும்​போது திருச்​செந்​தூரை நினைவு​படுத்​தும் விதமாக சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி என அம்பல​வாணர் சர்வ அலங்​காரத்​தில் எழுந்​தருள்​வதைக் காணலாம். மகா சிவராத்​திரி நான்கு கால பூஜைகளி​லும் சுற்று வட்டார மக்கள் திரளாக பங்கேற்​பர்.

திரு​வா​திரை​யில் பஞ்சமூர்த்தி புறப்​பாடு, ஐப்பசி​யில் திருக்​கல்​யாணம், வெள்​ளிக்​கிழமை தோறும் கோபூஜை, அட்சய திரு​தியை தினத்​தில் 27 பசுக்களை வைத்து பூஜை, தேய்​பிறை அஷ்டமிதோறும் யாகம் வளர்த்து வழிபாடு, வைகாசி உத்திரட்​டாதி நன்னாளில் வருஷாபிஷேகம், ஒவ்வொரு ஆங்கில மாதமும் கடைசி வியாழன் அன்று சிவனடி​யார்கள் திரளாகப் பங்​கேற்​கும் ​மாணிக்​கவாசகப் பெரு​மான் தந்​தருளிய ​திரு​வாசக ​முற்​றோதல் நிகழ்ச்சி என ஆண்டு ​முழு​வதும் பல்​வேறு ​விழாக்​கள் உற்​சாகமாக ​கொண்​டாடப்​பட்டு வரு​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in