புதனுக்குரிய பரிகாரத் தலமாக விளங்கும் புள்ளபூதங்குடி வல்வில்ராமர் கோயில்

புதனுக்குரிய பரிகாரத் தலமாக விளங்கும் புள்ளபூதங்குடி வல்வில்ராமர் கோயில்
Updated on
2 min read

தஞ்சை மாவட்டம் புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 10-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் ராமபிரான் சயன கோலத்தில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.
வைணவ சம்பிரதாயத்தில் 2 பூதபுரிகள் உண்டு. பூத கணங்களுக்கு சாப விமோசனம் அருளிய இடம், பூதபுரி என்று அழைக்கப்படும். முதல் பூதபுரி – காஞ்சிபுரம் அருகே உள்ள பெரும்புதூர் ஆகும். ராமானுஜர் அவதரித்த இத்தலத்தை ஆழ்வார்கள் சிறப்பித்தனர். இரண்டாவது பூதபுரியான புள்ளபூதங்குடியை ஆச்சாரியர்கள் சிறப்பித்தனர்.

ஒருசமயம் இத்தலத்துக்கு திருமங்கையாழ்வார் வந்திருந்தபோது, இத்தலத்தில் வேறு ஒரு தெய்வம் இருப்பதாக நினைத்து, பெருமாளை தரிசிக்காது செல்கிறார். அப்போது பெரிய ஒளி தோன்றியதைக் கண்ட திருமங்கையாழ்வார் வியந்தார். உடனே நான்கு கரங்களுடன் சங்கு சக்ரதாரியாக ராமபிரான் தோன்றி அருள்பாலித்தார். ராமபிரானை தரிசித்த மகிழ்ச்சியில், திருமங்கையாழ்வார், ‘அறிய வேண்டியதை அறியாமல் சென்றேனே’ என்று 10 பாசுரங்கள் பாடி அருளினார்.

தல வரலாறு

அயோத்தி அரசர் தசரத சக்கரவர்த்தியின் மகன் ராமபிரானாக திருமால் அவதரித்தார். சீதாபிராட்டியுடன் திருமணம் நடைபெற்று முடிந்ததும், அவருக்கு முடிசூட்ட முடிவு செய்யப்பட்டது. கைகேயி தசரத மன்னரிடம் பெற்ற வரத்தால், ராமபிரான் கானகம் செல்ல நேரிட்டது. அவருடன் சீதாதேவியும், லட்சுமணரும் சென்றனர்.

பஞ்சவடி என்னும் இடத்தில் மூவரும் தங்கியிருந்த சமயத்தில், அந்தக் குடிலில் இருந்து சீதாதேவியை இலங்கை வேந்தன் ராவணன் கவர்ந்து சென்றான். வழியில் சீதாதேவியை காப்பாற்றும் பொருட்டு, கழுகுகளின் அரசர் ஜடாயு, தனது இறக்கைகளைப் பயன்படுத்தி போரிட்டார். இருப்பினும் ராவணன் வாளால் ஜடாயுவை வெட்டியதால், அவர் மயங்கி விழுந்தார். அந்த நேரத்திலும் அவரது உதடுகள் ‘ராமா ராமா’ என்று முனகிய வண்ணம் இருந்தன.

சீதாபிராட்டியைத் தேடி ராமபிரானும் லட்சுமணரும் அவ்விடத்துக்கு வரும்போது, ஜடாயுவின் முனகல் சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி இருவரும் சென்றனர். அங்கு கழுகரசரைப் பார்த்தனர். நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஜடாயு, ராமபிரானிடமும் லட்சுமணரிடமும் கூறுகிறார். சற்று நேரத்தில் கழுகரசன் உயிர் துறந்தார்.

ஜடாயு ராமபிரானின் தந்தை தசரத மன்னருக்கு உற்ற நண்பர் ஆவார். நட்பின்படி பார்த்தால் ஜடாயு, ராமபிரானுக்கு பெரிய தந்தை முறை, ஜடாயுவின் மறைவு ராமபிரானுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. அவருக்கு ஈமக்கிரியைகள் செய்ய எண்ணினார் ராமபிரான்.

ஒருவருக்கு ஈமக்கிரியைகள் செய்யும்போது, செய்பவரின் மனைவி உடன் இருக்க வேண்டும் என்பது விதி. இதை உணர்ந்த ராமபிரான் மானசீகமாக சீதாதேவியை நினைத்தார். உடனே ராமபிரானுக்கு உதவி புரிய சீதாதேவியின் மறு அம்சமாகிய பூமிபிராட்டி தோன்றினார். பூமிபிராட்டியுடன் இணைந்து, ஜடாயுவுக்கு செய்யவேண்டிய ஈமக்கிரியைகளை செய்தார் ராமபிரான். இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டது.
கழுகுகளின் அரசரான ஜடாயு என்ற புள்ளுக்கு (பறவை) மோட்சம் அருளி ஈமக்கிரியை செய்த நிகழ்வைக் குறிக்கும் தலம் என்பதால் இத்தலம் திருபுள்ளபூதங்குடி என்ற பெயர் பெற்றது. (புள் – பறவை, பூதம் – உடல்). சோபான விமானத்தின் கீழ் ராமபிரான் (வல்வில் ராமர்) இத்தலத்தில் சயன கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சக்கரவர்த்தி திருமகனாக விளங்கும் வல்வில் ராமர் இத்தலத்தில் பொற்றாமரையாள் என்று அழைக்கப்படும் ஹேமாபுஜவல்லியுடன் அருள்பாலிக்கிறார். ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் இறைவனின் பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை ஆகிய 5 நிலைகளை உணர்த்துகின்றன. இத்தலத்தைப் பற்றி பாத்ம புராணம், ப்ரும்மாண்ட புராணம் இரண்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி உற்சவம் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு, சுவாமி புறப்பாடு நடைபெறும். புதனுக்குரிய பரிகாரத் தலமாக கருதப்படும் இத்தலத்தில் பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது நன்மை பயக்கும். திருமணத் தடை அகல ராமபிரானையும், பதவி உயர்வு பெற இத்தலத்தில் உள்ள யோக நரசிம்மரையும் வழிபட வேண்டும். குடந்தையில் இருந்து (17 கிமீ) திருவையாறு செல்லும் வழியில் சுவாமி
மலைக்கு அருகில் உள்ளது இத்தலம்.

- ரங்க ராமானுஜ தாஸன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in