ஆயுள் விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர்

ஆயுள் விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர்
Updated on
2 min read

என்றும் பதினாறு வயதுடையவராக இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றது போல, என்றும் 12 வயதுடையவராக இருக்க சித்ரகுப்தர் வரம் பெற்ற தலம் பரங்கிப்பேட்டைஆதிமூலேஸ்வரர் கோயிலாகும். இமயமலை மகா அவதார புருஷர் பாபாஜி பிறந்த தலம் இது.

காஷ்யப மகரிஷி ஒருசமயம் சிவனை வேண்டி யாகம் நடத்தியபோது, வருணன் மழையைப் பொழிவித்தான். இதனால் அவரிடம் சாபம் பெற்று தன் சக்தியை இழந்தான். இழந்த சக்தி மீண்டும் கிடைக்க, சிவனை வேண்டினான். வருணனுக்கு அருள்புரிந்த சிவன், அவனது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். இவருக்கு ‘ஆதிமூலேஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

சிவன் கோயில்களில் பைரவருக்கு அர்த்தஜாம பூஜை செய்து நடை அடைப்பது வழக்கம். இங்கு, பைரவருக்கும், சித்ரகுப்தருக்கும் பூஜை செய்து நடை அடைக்கப்படுகிறது.

அர்த்தஜாமத்தில் சித்ரகுப்தரே சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். சித்ரகுப்தர் சிவனருள் பெற்று, எமதர்மனின் கணக்கராக பணி பெற்ற தலம் இது. 12-ம் வயதில் சித்ரகுப்தரின் உயிர் பிரியும் என்று விதி இருந்ததை நினைத்து, அவரது தந்தை வசுதத்தன் வருந்தினார். அவரைத் தேற்றிய சித்ரகுப்தன், இத்தலத்து சிவனை வழிபட்டார்.

எமன் அவரை பிடிக்க வந்தபோது, சிவன் அம்பிகையை அனுப்பி எமனைத் தடுத்தார். அவள் எமனிடம், "சித்ரகுப்தன் சிவபக்தன். அவனை விட்டுவிடு!' என கட்டளையிட்டாள். எமனும் சித்ரகுப்தனை தண்டிக்காமல் விட்டதுடன், சிவனது கட்டளைப்படி தனது உதவியாளராகவும் ஏற்றுக் கொண்டார். சித்ரகுப்தர் என்றும் 12 வயதுடையவராக இருக்கும்படியான அருள் பெற்றார். அம்பாள் சந்நிதி எதிரே சித்ரகுப்தர் சந்நிதி உள்ளது.

மரணபயம் நீங்கவும், ஆயுள்விருத்தி பெறவும், நோய் தீரவும் இங்கு மிருத்யுஞ்ச ஹோமம் செய்து வழிபடலாம். அறுபது, எண்பதாம் திருமணங்களும் செய்து கொள்கிறார்கள். ஞானம், மோட்சம் தரும் கேது பகவானுக்கு அதிதேவதை சித்ரகுப்தர். எனவே இவையிரண்டும் கிடைக்க சித்ரகுப்தரை வணங்கலாம். சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஈசான்ய (வடகிழக்கு) திசையில் அமைந்த கோயில் இது.

வேண்டுவோருக்கு அமுதம் போல அருளை வாரி வழங்குவதால் இத்தல அம்பிகைக்கு அமிர்தவல்லி என்று பெயர். அம்பிகை விக்கிரகத்தின் கீழ் ஸ்ரீசக்ரம் உள்ளது. சித்திரை மாதத்தில் முதல் ஏழு நாட்கள் சிவன், அம்பிகை மீது சூரிய ஒளி விழும். இந்நாட்களில் இங்குள்ள சூரியனுக்கு முதல் பூஜை நடக்கும்.

வருணன் அருள் பெற்ற தலமென்பதால் குறைவின்றி மழை பெய்யவும், அதிக மழைப் பொழிவால் சேதம் உண்டாகாமல் இருக்கவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம். துர்கையை சுற்றி வந்து வழிபடும் வகையில் சந்நிதி இருக்கிறது. பிரகாரத்தில் ராமேசுவரம் ராமலிங்க சுவாமி, காசி விஸ்வநாதர் சந்நிதிகள் உள்ளன.

நீலகண்டர், நீலாயதாட்சி, சக்தி விநாயகர், சுப்பிரமணியர், கடம்பன், பாதாள லிங்கம், கஜலட்சுமி, கால பைரவர், சூரியன் ஆகியோரும் உள்ளனர். திருநள்ளாறு போல, கோயில் முகப்பில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கியிருக்கிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு எள் தீபமேற்றி வழிபடலாம். சிதம்பரத்தில் இருந்து 12 கிமீ தூரத்திலுள்ள பரங்கிப்பேட்டையில், சேவாமந்திர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது இக்கோயில்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in