

முற்பிறவி பாவங்களை போக்கும் சிவாலயங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும் நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில் தனிச்சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.
மேற்கு நோக்கி உள்ள சிவாலயத்தை வணங்கினால், 100 சிவாலயத்தை வணங்கியதற்கு சமம் என்பர். நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள சீயாத்தமங்கை கோயிலில் சிவபெருமான் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். முடிகொண்டான் ஆற்றுக்கு வடகரையில் இந்த கோயில் அமைந்துள்ளது.
சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சிவபெருமானுக்கு 5 அடுக்கு கோபுரமும், அன்னைக்கு இரண்டு அடுக்கு கோபுரமும் காணப்படுகிறது. முற்காலத்தில், சரக்கொன்றை மலர்கள் சூழ்ந்த வனமாக சீயாத்தமங்கை பகுதி இருந்தது. மலர்களின் நறுமணத்தை அறிந்து மகிழ்ச்சியுடன் இந்த தலத்துக்கு வந்தார் சிவபெருமான். அதன் பிறகு இங்கேயே தங்கியிருந்து அருள்பாலிக்கத் தொடங்கினார்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனாரும், அவரின் மனைவி மங்கையர்க்கரசியாரும் அவதரித்தது இந்த தலத்தில்தான். இந்த தம்பதி தினமும் அயவந்தீஸ்வரரை, கொன்றை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம். ஒருநாள் சிவபூஜையின்போது, சிவலிங்கத் திருமேனியில் சிலந்தி ஒன்று ஊர்வதை கவனித்தார், மங்கையர்க்கரசியார்.
எம்பெருமான் உடலில் சிலந்தியா? அதை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். செய்வதறியாது தவித்த அவர், அச்சிலந்தியை வாயால் ஊதினார். சிலந்தி அங்கிருந்து செல்லவில்லை. எனவே மீண்டும், மீண்டும் பலங்கொண்டபடி முயற்சி செய்தார். அதைக் கண்ட திருநீலநக்கருக்கு கோபம் வந்தது.
"இறைவனை மதிக்காமல் உனது எச்சிலை அவர் மீது தெறிக்க விட்டு விட்டாய். இந்த செயல் ஆகம விதிகளைமீறியது" என்று மனைவியைக் கண்டித்தார். மனைவியை கோபத்தோடு அங்கேயே விட்டு விட்டு தான் மட்டும் இல்லம் திரும்பினார்.
மங்கையர்க்கரசியோ, இறைவனை பணிந்து அங்கேயே அமர்ந்து கொண்டார். "இறைவா நான் செய்தது தவறு என்றால், என்னை மன்னித்து விடு. என் கணவர் என்னை விட்டு பிரியும்படி செய்து விடாதே" என சிவபெருமானே கதி என இருந்தார்.
அன்று இரவு திருநீலநக்கர் கனவில் தோன்றிய ஈசன், “திருநீலநக்கரே உம் மனைவி எம்மிடம் தாயுள்ளத்துடன், நடந்துகொண்டார். விடிந்ததும் கோயிலுக்குவந்து என் திருமேனியைப் பார்" என்றார்.
விழித்தெழுந்த திருநீலநக்கர் விடியும்முன்பே கோயிலுக்கு ஓடினார். கோயில்கருவறையில் இருந்த சிவபெருமானின் லிங்கத் திருமேனியைக் கண்டார்.லிங்கத் திருமேனியில் மங்கையர்க்கரசியாரின் எச்சில்பட்ட இடத்தை தவிர மற்ற இடங்களில் எல்லாம் சிலந்தி கடித்து புண்ணாகியிருந்தது.
இறைவனுக்கு நேர்ந்த துயரை கண்டு திருநீலநக்கர் கண் கலங்கினார்.
"சிவபெருமானே என்னை மன்னித்து விடுங்கள்" என இறைவனை வணங்கி நின்றார். அதன் பின் சிவபெருமான் பழைய ரூபத்துக்கு வந்தார். திருநீலநக்கரும் அவரது மனைவியும் சிவபெருமான் முன்பு விழுந்து வணங்கினர். தன் மனைவி மங்கையர்க்கரசியை தனது அன்னையாக அந்த இறைவனே ஏற்றுக் கொண்டதை எண்ணி உள்ளம் உவந்தார்.
மங்கையர்க்கரசியாரை தன்னுடன் அழைத்துக்கொண்டு மீண்டும் இல்லம் திரும்பினார். இத்தலத்து ஈசனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
கோயில் உட்புறத் தோற்றம்: சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே சூரிய தீர்த்தமும், மேற்கேசந்திர தீர்த்தமும் உள்ளது. இந்த குளத்தில்நீராடி அருகில் உள்ள அரச மரத்தை சுற்றி வந்தால் திருமண தடை நீங்குகிறது. இந்த கோயில் ருத்ர வியாமளா தந்திரம்ஆகமத்தில் கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழைந்ததும் திருநீலநக்க நாயனார், மங்கையர்க்கரசி விக்கிரகங்கள் உள்ளன.
மறுபுறம் சமயக் குரவர்கள், மூலஸ்தானத்துக்கு செல்லும் முன்பு துவார பாலகர், விநாயகர், தண்டாயுதபாணி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். அர்த்தநாரீஸ்வரர், துர்கையம்மன், பிட்சாடனர், பிரம்மதேவர், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன கணபதி, கவுரி, அகத்தியர், மகாவிஷ்ணு, அனுமன் ஆகியோரது திருமேனிகளும் உள்ளன.
தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் இருமலர்க்கண்ணி அம்மை சந்நிதிக்குள் நுழைந்தால், விநாயகர், முருகன், நந்தி,பைரவர், சண்டிகேஸ்வரி, துவாரக பாலகிகள் உள்ளனர். வைகாசி மூல நட்சத்திர நாளில் திருநீலநக்க நாயனாருக்கு குருபூஜை சிறப்பாக நடக்கிறது.
முற்காலத்தில் செட்டிநாடு எனப்படும் காரைக்குடியில் இருந்து தொழில் நிமித்தமாக நாகப்பட்டினம் நோக்கி மக்கள் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது மெல்ல இருள் படர்வதும், வெயில் அடிப்பதும், மழை பெய்வதுமாக இருந்தது. இதனால் அந்த பயணிகள் வழி தெரியாமல் அவதிப்பட்டனர். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு சிறுமி பயணிகள் கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவரின் கையைப் பிடித்தாள்.
"என்னுடன் வாருங்கள். நீங்கள் செல்லும் இடத்துக்கு வழி காட்டுகிறேன்" என்று அழைத்து சென்றாள். அவளுடைய கண்களில் மின்னிய பிரகாசத்தை கண்டு மெய்சிலிர்த்த பயணிகள், அவளைப் பின் தொடர்ந்தனர்.
சற்று தூரத்தில் அமைந்திருந்த கோயிலை அந்த கூட்டத்தினர் நெருங்கியதும், பெரியவர் கையை விடுவித்துக் கொண்ட அந்தச் சிறுமி சட்டென மறைந்து போனாள். அனைவரும் அதிர்ந்தனர். சிறுமியாக வந்தது, அந்தக் கோயிலில் அருள்பாலிக்கும் இருமலர்க்கண்ணி அம்மையே என்பதை அறிந்து வியந்தனர். அம்பிகை இருமலர்கண்ணியம்மைக்கு, உபயபுஷ்ப விலோசினி என்ற திருநாமமும் உண்டு.
ஆவணி மூல நட்சத்திர வழிபாடு: சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில் இறைவனின் திருமேனியில் சிலந்தி ஊர்ந்தது மூல நட்சத்திர நாளில்தான். எனவே, மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கி நலம்பெற வேண்டிய திருத்தலமாக இத்தலம் போற்றப்படுகிறது.
ஆவணி மாத மூல நட்சத்திர நாளில் இங்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை தரிசித்து அந்த நாளில் நடைபெறும் ருத்ர வியாமளா தந்திர பூஜையில் பங்கேற்றால் திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும். சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.
கோயில் திறக்கும் நேரம்: காலை 6:00 மணி முதல்10 மணி வரை. | மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.|
எங்கே இருக்கு? - நாகை- கும்பகோணம் சாலையில்உள்ள திருமருகலை அடைந்து அங்கிருந்து 2 கிமீ உள்ளே சென்றால் இக்கோயிலை அடையலாம். நாகப்பட்டினத்தில் இருந்து 13 கிமீ தொலைவில் உள்ளது இக்கோயில்.
- pbg1972pbg@gmail.com