

வேதங்களை முறையாகக் கற்றுத் தருவதையும் உரிய முறையில் சீடர்களுக்குப் பாராயணம் செய்யும் பயிற்சிகளையும் தன்னிகரற்ற சேவையாகக் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அளித்துவருபவர் ஸ்ரீ குறிச்சி சுவாமி.
குறிச்சி ஆர்.லட்சுமி ந்ருசிம்ம சுவாமி (74), சிறுவயது முதலே தெய்வச் சிந்தனையுடன் வேதத்தில் சிறந்த விற்பன்னராக இருந்து, சீடர்களுக்கு வேதப் பயிற்சி அளித்துவருகிறார். அகோபில மடத்தின் 44ஆவது பட்டம் ஸ்ரீ வில்லிவலம் ஸ்ரீமத் அழகியசிங்கர் மற்றும் குறிச்சி சுவாமியின் பெருமுயற்சியால் 2007ஆம் ஆண்டு, வேத பிரபந்த சமிதி மற்றும் வேத வித்யாலயம் நிறுவப்பட்டது.
வேதத்தைப் பரப்பிய பொறியாளர்: குறிச்சி சுவாமி, திருச்சி ஆண்கள் மேனிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து, திருச்சி சேஷசாயி தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் படிப்பை முடித்தார். லூகாஸ் டிவிஎஸ் நிறுவன சென்னைக் கிளையில் தொழில்நுட்ப வல்லுநராக 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றார். பணி காலத்திலும், வேதத்தில் ஈடுபட்டு அதைப் பரப்புவதற்கான வழியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
குறிச்சி சுவாமி, வேதம், வேத அங்கம் முதலியவற்றைத் தன் தந்தை குறிச்சி கிடாம்பி ராமசுவாமி ஐயங்காரிடமும் மலையாங்குலம் வேங்கடாசாரியிடமும் கற்றார். 1980ஆம் ஆண்டு முதல் வேத பாராயணம், வேத அத்யயனம் ஆகியவற்றைப் பல்வேறு கோயில்கள், ஆன்மிக இடங்களில் நிகழ்த்திவந்தார்.
ஸ்ரீ அகோபில மடம், ஸ்ரீ வானமாமலை மடம், ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம், பிராமண சங்கம், ரோட்டரி கிளப் தமிழ்நாடு ஆகியவற்றால் குறிச்சி சுவாமி கௌரவிக்கப்பட்டார். காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், குறிச்சி சுவாமிகளின் வேத பாராயணத்தைக் கேட்டுப் பாராட்டியுள்ளார்.
குறிச்சி சுவாமி, தனது சீடர்களுக்கு த்ரிகால சந்தியாவந்தனம், சாளக்ராம ஆராதனம், பஞ்சசூக்தம், ருத்ரம், சமகம், நவக்கிரக சூத்ரம், நட்சத்திர வாக்யம், ஸ்வஸ்தி வசனம், அச்சித்ரம், அருணம், அஸ்வமேதம், காடகம், தைத்ரிய உபநிஷத், உதக சாந்தி, சம்பிரதாய விஷயம் உள்ளிட்டவற்றைப் போதித்துவருகிறார். சப்த காண்ட பாராயணத்தையும் தொடங்கியுள்ளார்.
தமிழிலும் பாராயணப் பயிற்சி: கே.டி.ஆர் பப்ளிகேஷன் மூலம் 18 நூல்களை சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் ஸ்வர குறியீடுகளுடன் தனது சீடர்களுக்கான பாராயணப் பயிற்சிக்கு உதவும் வகையில் வெளியிட்டுள்ளார். தற்போது சென்னையில் வேளச்சேரி, தாண்டேஸ்வரம் நகர், மடிப்பாக்கம், கிண்டி, அடையாறு, சுதர்சன் (ஹபிபுல்லா தெரு), ஆதம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பாராயண வகுப்புகள் நடைபெறுகின்றன.
200க்கும் மேற்பட்ட வேத ஆசிரியர்கள் மூலம் 600க்கும் மேற்பட்ட சீடர்களுக்கு வேதப் பயிற்சி இந்தப் பாடசாலைகளில் அளிக்கப்படுகிறது. அண்மையில் குறிச்சி சுவாமி வேத பாட சாலையின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. மணி திராவிட் சாஸ்திரிகள், உத்தாமூர் ராஜகோபாலன் சுவாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சங்கர நாராயணன் சுவாமி, புரிசை ஜகன்னாத சுவாமி, பார்த்தசாரதி சுவாமி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
வேத வகுப்புகளில் சேர விரும்புபவர்கள் தொடர்பு கொள்வதற்கு: 9940385952.