

பெங்களூர் ஏ.ஆர்.ரமணியம்மாள். காத்திரமான குரலில் இவர் பாடிய ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ போன்ற காவடி பாடல்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு தைப்பூச திருவிழாக்களில் இருக்கும். இவர் பாடிய சம்ஸ்கிருத கணபதி துதிப் பாடல் மிகவும் பிரசித்தமானது. `பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னகதின் பஜன்க்ரே...’.
பெங்களூர் ரமணியம்மாள் பாடிப் பிரபலப்படுத்திய இந்தப் பாடலின் பின்னணியில் அவருடைய கணீர்க் குரலுக்கு தோதாக அசுர வாத்தியமான நாகசுரம் தவிலைப் பயன்படுத்தியிருப்பார்கள்.
பெங்களூர் ரமணியம்மாளின் கணீர்க் குரலில் இந்தப் பாடலைக் கேட்பது பக்திப் பரவசத்தை அளித்தது என்றால், இதே பாடலை எல்.ஆர். ஈஸ்வரியின் குரலில் கேட்பது வேறொரு புதிய அனுபவத்தைத் தரும். இன்றைய தலைமுறையின் இசையில் புதிய தடத்தில் அதே சுகானுபவம் தொடர்கிறது.
வயலின் மேதை எல்.சுப்ரமணியத்தின் மகள் பிந்து சுப்ரமணியம் குரலில் இந்தப் பாடலைக் கேட்பது புதிய அனுபவத்தைத் தருகிறது. நாகசுரத்திலும், புல்லாங்குழல் இசைப் பின்னணியிலும் கேட்ட இந்தப் பாடல், நவீன வாத்தியக் கலவையான இசையோடு தற்போது ஒலிக்கிறது.
கீத் பீட்டர்ஸிரின் பாஸ் கிடாரில் தொடங்கி வயலின் (அம்பி சுப்ரமணியம்), டிரம்ஸ் (கார்த்திக் மணி), கிடார் (ஆல்வின் ஃபெர்னான்டஸ்), கீபோர்ட் (விவேக் சந்தோஷ்) என ஒவ்வொரு இடையிசையிலும் ஒவ்வொரு வாத்தியத்தின் ஒலியை பிரதானமாக ஒலிக்க வைத்திருப்பது இந்த ஆல்பத்தின் சிறப்பு.
துரிதகதி தாளத்திலேயே இந்தப் பாடலைக் கேட்ட செவிகளுக்கு, `இப்படியும் இந்தப் பாட்டில் ஒரு தாலாட்டைக் கொண்டுவர முடியுமா?' என்றால், முடியும் என்று நிரூபித்திருக்கிறார் பிந்து சுப்ரமணியம்!
இந்தப் பாடலை மிதமான தாளக்கட்டுடன் இனிமையாகப் பாடியிருக்கும் யுக்தியை பாராட்டாமல் இருக்க முடியாது. அந்தத் த்வனிதான் இதற்கு முன்பாக இந்தப் பாடலைப் பாடியவர்களிடமிருந்து தனித்து காட்டுகிறது. `சுப்ரமண்யா’ குழுவின் மூலம் இந்தப் பாடலை கேட்க வைத்திருக்கின்றது இன்றைய இளைய தலைமுறை.