

செய்த பாவத்தை காசிக்குச் சென்று போக்கலாம் என்பார்கள். ஆனால் திருவிற்கோலம் திரிபுராந்தக சுவாமி திருத்தலத்தில் அந்தக் காசியில் செய்த பாவமும் நீங்கிவிடும் என்பதுதான் இந்த ஆலயத்தின் சிறப்பு. இந்தத் திருத்தலம் ‘நைமிசாரண்ய க்ஷேத்ரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கூவத்தில் இருக்கும் இந்தத் திருத்தலத்தின் பெயரைக் கேட்டாலோ, சொன்னாலோ, நினைத்தாலோ அல்லது இத்தலத்தில் பிறந்தாலோ முக்தி கிடைக்கும் என்பது ஐதிகம்.
‘ஐயன்நல் அதிசயன் அயன்விண் ணோர்தொழும்
மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான்
பையர வல்குலாள் பாக மாகவுஞ்
செய்யவன் உறைவிடந் திருவிற் கோலமே’
- மூன்றாம் திருமுறையில் 23ஆம் பதிகத்தில் மூன்றாம் பாடல் இது. இதில் சம்பந்தர் இவ்வூர் ஈசனை, ‘நல் அதிசயன்’ என்று சொல்கிறார்.
தீண்டாத் திருமேனி
மூலவர் சுயம்பு மூர்த்தி. இவரை பூஜை செய்யும்போது கோயில் குருக்கள்கூட இவரைத் தொடுவது இல்லை. அதாவது இறைவனைத் தொடாமலே அனைத்து பூஜைகளும் நடக்கின்றன. இன்று வரை இறைவன் மீது மனிதனின் கரம் பட்டதே இல்லை. அதனால் அய்யன் திருமேனியை ‘தீண்டாத் திருமேனி’ என்றும் அழைக்கிறார்கள். அதிசயம் மிக்க இந்த இறைவன் மணலால் ஆன லிங்கம் என்பது மற்றுமொரு அதிசயம். அய்யனுக்குப் பதினாறு முழம் வேட்டி மட்டுமே சாற்றப்படுகிறது.
கோயிலுக்கு வடக்கே தொலைவில் உள்ள திருமஞ்சன மேடையில் இருந்து கூவம் ஆற்று நீரைக் கொண்டு வந்துதான் அபிஷேகம் செய்கிறார்கள். தப்பித் தவறி வேறு நீரால் அபிஷேகம் செய்தால், சுவாமியின் மீது எறும்பு மொய்த்துவிடுகிறது. மேலே சொன்ன எல்லா அதிசயங்களையும் மனதில் கொண்டுதான், திருஞானசம்பந்தர் இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனை ‘நல் அதிசயன்’ என்று பாடியுள்ளார்.
இந்த இறைவனை வணங்கினால் பாவம் நீங்கும் என்பதை, ‘அடியர் மேல்வினை சிந்துவான் உறைவிடந் திருவிற் கோலமே’ என்றும், இவ்வூர் இறைவனை வணங்கினால் பெரும் செல்வம் உண்டாகும் என்பதை, ‘நேசர்க்குப் பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடுஞ் சீர்மையினானிடந் திருவிற் கோலமே’ என்றும் திருஞானசம்பந்தர் பாடுகிறார்.
அச்சறுத்த விநாயகர்
வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்கிற மூன்று அரக்கர்கள் செய்த கொடுமை தாங்காமல், தேவர்களும் முனிவர்களும் ஈசனிடம் வேண்டினார்கள். அவர்களைக் காக்க மேரு மலையையே வில்லாக வளைத்து ஈசன் போருக்குக் கிளம்பினார். போருக்குக் கிளம்பிய இறைவனைத் தேவர்கள் பலரும் கூட்டுசேர்ந்து தேர் வடிவம் எடுத்துத் தாங்கினார்கள். தேவர்கள் தேராக மாற, அந்தத் தேரின் மீது ஏறி அரசுரர்களை அழிக்கப் புறப்பட்டார் சிவன். தன்னை வழிபடாமல், இறைவன் போருக்குக் கிளம்பியதால், விநாயகர் கோபம் கொண்டு தேரின் அச்சை முறித்தார். அச்சு முறிந்து தேர் குடை சாய ஆரம்பித்தது.
ஆகவே, ஈசன் தேரை விட்டு வெளியில் குதித்தார். குதித்த இறைவனை நந்தியின் வடிவம் கொண்டு திருமால் தாங்கினார். அப்போது, தேவர்கள் அனைவரும் தங்கள் உதவியால்தான் இறைவன், அசுரர்களைக் கொல்கிறார் என்று ஆணவம் கொண்டனர். அவர்களுக்குப் பாடம் புகட்ட எண்ணினார் ஈசன். ஆகவே, ஒற்றைப் புன்னகையால் அசுரர்கள் நகரத்தையே அழித்தார். இந்தத் திருவிளையாடல் நடந்தது இந்தத் திருப்பதி யில்தான். அதற்குச் சாட்சி யாக இத்தல விநாயகர் ‘அச்சறுத்த விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார்.
காத்தல் திருநடனம்
முஞ்சிகேசர், கார்கோடகர் என்கிற முனிவர்களின் தவத்தினை ஏற்று திருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவம் ஆடி காளியின் செருக்கை அழித்தார் ஈசன். ஆனாலும் காளியின் சினம் அடங்கவில்லை. ஆகவே திருவிற்கோலத்தில் தான் காத்தல் திருநடம் புரிவதாகவும் அங்கே சென்று அதைத் தரிசித்து நற்கதி அடையும்படியும் காளியிடம் ஈசன் மொழிந்தார். அதன்படி இங்கே இறைவன் புரியும் ‘காத்தல் திருநடன’த்தைத் தரிசித்து காளி நற்கதி அடைந்ததாக நம்பப்படுகிறது.
வரப்பிரசாதி
கூரம், அதாவது ஏர்கால் பூமியில் பதிந்த இடத்தில் ஈசன் சுயம்புவாகத் தோன்றினார். கூரம் முறிந்து நின்ற இடம் என்பதால் `கூரம்' என்று இத்தலம் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் அது கூவமாக மாறியது.
அம்பிகை கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருள் பாலிக்கிறாள். அவளுக்கு முன்னே ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக் கிறது. ஆகவே, அம்பிகை வரப்பிரசாதியாக இருக்கிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருவிற்கோலம் திரிபுராந்தக சுவாமியையும் திரிபுராந்தக நாயகியையும் வணங்கினால் வெற்றியும் ஆளுமைத் திறனும் அதிகரிக்கும், திருமணத் தடை நீங்கிப் பல சௌபாக்கியங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
| அமைவிடம் காஞ்சிபுரத்தில் இருந்து சுங்குவார் சத்திரம் வழியாக திருவள்ளூர் செல்லும் பாதையில், கூவம் கூட்ரோடில் இறங்கிச் செல்ல வேண்டும். |