

இந்த அண்டம் பெரு வெடிப்பு மூலம் தோன்றிய போது முதலில் அதில் இயற்பியலும் வேதியியலும் மட்டும்தான் இருந்தன. பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, அதில் ஒரு சமநிலை வரும்பொழுது தான் உயிரியல் அங்கே தோன்றியது. இது பூமியின் பரிணாம வளர்ச்சி.
அதே போல, தாவரத்துக்கும் ஒரு பரிணாம வளர்ச்சி இருக்கிறது. இன்றைய இயற்கை விவசாயம் `மண்ணில் நிறைய நுண்ணுயிர்கள் வேண்டும்' என்று பொதுவான ஒரு கட்டமைப்பை நிறுவி இருக்கிறது. ஆனால், அதில் தாவரவியலின் பரிணாம வளர்ச்சியையும் இணைத்து, எந்தப் பயிருக்கு எப்படிப்பட்ட நுண்ணுயிர்க் கூட்டம் மண்ணில் தேவை என்பதைக் கட்டமைக்கும் முறை மீளுருவாக்க விவசாயத்தில் மட்டுமே உள்ளது.
உயிரோட்டம் உள்ள மண்ணில் தான் கோடிக்கணக்கான பாக்டீரியாக்களும் பூஞ்சைகளும் வாழ்கின்றன. இந்தப் பூஞ்சைகளுக்கும் பாக்டீரியாக்களுக்கும் இடையே உள்ள விகிதம் (Fungal to Bacterial Ratio - F:B Ratio) சரியான அளவில் இருக்க வேண்டும்.
இந்த விகிதமே நீங்கள் சாகுபடி செய்யும் பயிர் எவ்வளவு ஆரோக்கியமாகவும், உயர்தர மகசூலுடனும் வளரும் என்பதைத் தீர்மானிக்கிறது. இயற்கையில் மண் உருவாகும் முறையைக் கவனித்தால், அது பாக்டீரியாக்கள் நிறைந்த மண்ணிலிருந்து படிப்படியாகப் பூஞ்சைகள் நிறைந்த மண்ணாகப் பரிணாம வளர்ச்சி பெறுகிறது. இந்தப் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்பவே அதில் வளரும் தாவரங்களும் மாறுகின்றன.
ஆரம்ப நிலையில் (F:B = 0.1:1), மண் அதிகக் காரத்தன்மையுடனும், குறைந்த காற்றோட்டத்துடனும், நைட்ரேட் வடிவிலான நைட்ரஜனுடனும் இருக்கும். இந்த பாக்டீரியா மண் சூழலில் பாறைகளில் முளைக்கும் பாசிகள் மற்றும் பூச்சிகளை ஈர்க்கும் களைகள் மட்டுமே வளரும்.