

தமிழகத்தில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் சாகுபடி பரவலாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், தரமான விதைகள் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாட்டைப் போக்கவும், கூடுதல் லாபம் ஈட்டவும் விவசாயிகள் நேரடியாக விதை உற்பத்தியில் ஈடுபடுவது தற்போதைய தேவையாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள காவேரியம்மாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ப.மகாராஜன், வெங்காய விதை உற்பத்தியில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறார். இது குறித்த தனது அனுபவங்களை அவர் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
ஏற்ற காலமும் மண் வகையும்
சின்ன வெங்காயத்தை இப்போது பெரும்பாலான மாதங்களில் சாகுபடி செய்தாலும், கார்த்திகை மாதமே நடவு செய்ய மிகச் சரியான பட்டமாகும். தண்ணீர் தேங்காத, நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் மற்றும் சரளை மண் நிலங்கள் வெங்காய சாகுபடிக்கு உகந்தவை.
நடவுக்கு முன்பாகவே நிலத்தை நன்றாக உழுது தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் அல்லது நேரடிப் பாசனம் என நாம் மேற்கொள்ளும் பாசன முறைக்கு ஏற்ப பாத்திகளை அமைத்துக் கொள்வது அவசியமாகும்.
பூத்த நிலையில் வெங்காயப் பயிர்