

கார்த்திகேயன்
தமிழகத்தின் அடையாளமான பனை மரங்கள் செங்கல் கால்வாய் போன்ற காரணங்களால் குறைந்துகொண்டே வரும் சூழலில், அந்தப் பனைகளைக் காப்பதோடு பனங்கிழங்கில் இருந்து பலவிதமான பலகாரங்களைச் செய்து ஆகச் சிறந்த தொழில்முனைவோராக விளங்கிவருகிறார் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (42).
எம்.ஏ. பி.எட். முடித்துத் தனியார் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், பனங்கிழங்கை மதிப்பு கூட்டும் வித்தையைக் கற்று அதை லாபகரமான தொழிலாக மாற்றியுள்ளார். இத்தொழிலைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கிவருகிறார்.
தொழில்கள் எவ்வளவோ இருக்க, பனங்கிழங்கில் தொழில் செய்யத் தோன்றியது எப்படி என்ற கேள்விக்கு, “எங்க வயல்வெளியில் பனை மரங்கள் மிகவும் அதிகம். வரப்பு முழுவதும் பனை மரங்கள்தான் இருக்கின்றன. ஒரு பனை மரம் 250 காய்களைக் காய்க்கும்.
அதிலிருந்து 500 முதல் 600 பனை விதைகள் வரை கிடைக்கும். அதாவது 600 பனங்கிழங்கு உற்பத்தி செய்ய முடியும். எங்களுடைய தோட்டத்தில் ஆண்டுக்கு 8 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் கிழங்குகள் வரை விளையும். ஆனால் ஒரு கிழங்கை வியாபாரிகள் 30 பைசாவுக்கும் 40 பைசாவுக்கும் தான் விலைக்கு வாங்குவார்கள்.