குழித்தட்டுல நாற்று உற்பத்தி: லட்சக் கணக்குல வியாபாரம்
காய், கனி, பூ விவசாயத்தில் நேரடியாக விதை விதைக்காமல், நாற்று நடும் முறையையே விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர். இதற்காக மேட்டுப்பாத்தி அமைத்து, மண்ணில் நேரடியாக விதையை விதைத்து நாற்று உருவாக்கப்படும். வளர்ந்த நாற்றுகளை பறித்து சாகுபடி நிலத்தில் ஊன்றி பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த முறையில் நாற்றுகள் சீரான வளர்ச்சி இல்லாததும், நாற்றுகளை பறிக்கும் போது வேர்கள் அறுந்துவிடுவதாலும் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக, பிளாஸ்டிக் குழித்தட்டுகளில் கன்றுகளை உற்பத்தி செய்யும் நவீன தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறார் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கொத்தமங்கலம் மேற்கு பகுதியைச் சேர்ந்த எஸ்.சதானந்தம்.
இது குறித்து சதானந்தம் கூறியதாவது: சிறு வயதில் இருந்து எனக்கு நாற்று உற்பத்தியில் அதீத ஆர்வம் உண்டு. தொடக்கத்தில் பாத்தி அமைத்து கத்திரி, தக்காளி, மிளகாய் ஆகிய காய், கனி நாற்றுகளை தயாரித்து விற்பனை செய்து வந்தேன். அதில், வேர் அறுந்து விடுவதால் இழப்பு ஏற்பட்டது.
