

“நிலத்தைச் சும்மா போடக் கூடாது” என்பது நம் உழவர்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்துள்ள முதன்மையான கருத்து. இயற்கையில் எந்தவொரு நிலமும் வெறுமையாக இருப்பதில்லை; மண்ணை எப்போதும் உயிர்ப்புடன் மூடி வைப்பதே நம் பாரம்பரியம்.
ஆனால், “கோடையில் ஆழமாக உழவு செய்தால் களை விதைகள் மேலே வந்து வெயிலில் செத்துவிடும், களைப் பிரச்சனை குறையும்” என்ற அறிவுரையை ஏற்று, நம் பாரம்பரியத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு அதற்கு நேர்மாறாகச் செயல்படுவது வருந்தத்தக்கது. மண்ணை எப்போதும் பயிர்களாலோ அல்லது காய்ந்த சருகுகளாலோ மூடி வைத்து அதன் உயிரோட்டத்தைக் காப்பதே மீளுருவாக்க விவசாயத்தின் (Regenerative Agriculture) முதல் விதியாகும்.
இயற்கை விவசாயத்தில் 20 வகையான விதைகளை விதைத்து மடக்கி உழுவது தெரிந்ததே என்றாலும், அதை அறிவியல் ரீதியாக மீளுருவாக்க விவசாயம் மூடுபயிர்கள் (Cover Crops) என்ற கோட்பாட்டின் மூலம் கையாள்கிறது.
ஆஸ்திரேலிய மண் விஞ்ஞானி டாக்டர் கிறிஸ்டின் ஜோன்ஸ் கூற்றுப்படி, குறைந்தபட்சம் 4 வெவ்வேறு தாவரச் செயல்பாட்டுக் குழுக்களைச் சேர்ந்த 8 முதல் 12 வகையான பயிர்களை ஒன்றாகக் கலந்து சாகுபடி செய்ய வேண்டும்.