

விவசாய நிலத்தில் களைகள் முளைத்தவுடனே, அவற்றை அழிக்கக் களைக்கொல்லிகளையோ அல்லது கூலி ஆட்களையோ நாடுவதுதான் நமது வழக்கமான நடைமுறை. ஆனால், மீளுருவாக்க விவசாயத்தில் (Regenerative Agriculture) களை என்பது ஓர் எதிரியல்ல; அது உங்கள் மண் என்ன கேட்கிறது என்பதை உணர்த்தும் ஒரு வழிகாட்டி.
ஜே.எல். மெக்காமன் (Jay L. McCaman) என்ற மேலைநாட்டு வேளாண் நிபுணர், ‘வென் வீட்ஸ் டாக்’ (When Weeds Talk) என்ற தனது நூலில், “மண்ணில் ஏதோ ஒரு சத்துக் குறைபாடு, காற்றோட்டமின்மை அல்லது கனிமச் சமநிலையின்மை ஏற்படும்போதுதான், அதைச் சரிசெய்ய இயற்கை களைகளை அனுப்புகிறது” என்கிறார்.
உதாரணமாக, இறுக்கமான கடின மண்ணில் ஆழமான ஆணிவேர் கொண்ட களைகள் முளைத்து, மண்ணைத் துளைத்துக் காற்றோட்டத்தை உருவாக்க முயல்கின்றன. ஆகவே, களைக்கொல்லி போட்டு களைகளை அழிப்பது, காய்ச்சல் வந்தவுடன் மாத்திரை போட்டு அறிகுறியை மட்டும் மறைப்பது போன்றது; அது நோய்க்கான மூலகாரணத்தைச் சரிசெய்யாது.
மண்ணின் வேதியியல் மற்றும் இயற்பியல் அமைப்பை ஒன்றாகச் சீரமைக்க, புகழ்பெற்ற மண்ணியல் விஞ்ஞானி வில்லியம் ஆல்பிரெக்ட் (William Albrecht) மற்றும் அவரது சீடர் நீல் கின்சி (Neal Kinsey) ஆகியோரின் ‘கேட்அயன் பரிமாற்றச் சமநிலை’ (Cation Exchange Capacity - CEC) கோட்பாடு மிகவும் முக்கியமானது.