

ரசாயன உரங்களால் மண் சீரழிவதும், இயற்கை விவசாயத்தால் உடனடியாக ஏற்படும் விளைச்சல் வீழ்ச்சியும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்றன. மேலும், காலநிலை மாற்றமும் இதற்குப் பெரும் சவாலாக உள்ளது.
எனவே, இயற்கை வேளாண்மையின் அடிப்படை நெறிமுறைகளுடன், நவீன அறிவியலையும் இணைக்கும் ‘மீளுருவாக்க விவசாய முறை’ (Regenerative Agriculture) மட்டுமே மண்ணையும், விளைச்சலையும், விவசாயிகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் சிறந்த தீர்வாகும் என்று மீளுருவாக்க விவசாய ஆலோசகரான ரவிசங்கர் கருப்பையா கூறுகிறார்.
இது தொடர்பாக இம்மாதம் 14, 21 ஆகிய தேதிகளில் ‘இந்து தமிழ் திசை’யின் ‘நிலமும் வளமும்’ பக்கத்தில் அவருடைய கட்டுரைகள் வெளியாயின. அந்தக் கட்டுரைகள் தொடர்பாக வாசகர்கள் எழுப்பியிருந்த கேள்விகள் சிலவற்றுக்கு இந்த வாரம் அவர் பதிலளிக்கிறார்.
பல்லாயிரம் ஆண்டுகளாக எந்த ரசாயனமும் நவீன தொழில்நுட்பமும் இன்றி உலக மக்கள் தொகைக்கு உணவு தந்த பாரம்பரிய விவசாய முறையை, ‘சாத்திய மற்றது’ என்று முடிவுகட்டுவது அவசரப்பட்டு எடுக்கப்படும் முடிவு அல்லவா?
ஒரு விவசாயிக்கு மகசூல்தான் முக்கியம் என்பது உண்மை. 1800இல் உலக மக்கள் தொகை 100 கோடி இன்று 830 கோடி. எல்லா மக்களுக்கும் உணவு தர பாரம்பரிய விவசாயத்தால் முடியாது. இதனை யாரும் மறுக்க முடியாது. இந்தச் சூழலில், ரசாயன விவசாயம் மகசூலை அதிகரித்துத் தந்தது. அதே நேரத்தில், மண்ணைக் கொன்றது, நீரை மாசுபடுத்தியது, உடலை நோயுறச் செய்தது.
மீளுருவாக்க விவசாயம் என்பது இந்த இரண்டுக்கும் இடையிலான பாதை. இந்த விவசாய முறையில், மகசூல் குறையாது; மண் வளம பெருகும்; மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறன் அதிகமாகும்; இடுபொருள் செலவு குறையும். பாரம்பரிய விவசாயத்தைக் கைவிடவில்லை. அதன் அறிவை எடுத்து, இன்றைய நவீன அறிவியலுடன் இணைக்கிறோம். இதுதான் மீளுருவாக்க விவசாயம். இது காலத்தின் கட்டாயம்.